*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Saturday, April 17, 2010

மே 10 2009 தொடக்கம் நாளை வரை – ஒரு பார்வை

கடந்த வருடம் மே மாதம் 10 ஆம் திகதி நோர்வேயில் ஆரம்பிக்கப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான மீளுறுதி வாக்கெடுப்பின் தொடர்ச்சியாக, எதிர்வரும் 17 ஆம் மற்றும் 18 ஆம் திகதிகளில் அவுஸ்திரேலியாவிலும் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் வலுவுடமையை இன்றைய காலகட்டத்தில் பரிசோதிப்பதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
இலங்கைத்தீவின் அனைத்து தமிழ் கட்சிகளாலும் 1976 ஆம் ஆண்டில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினை 1977 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட பொதுத்தேர்தலில் பெரும்பான்மையான தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அத்தீர்மானத்தினை முன்னெடுப்பதற்கான ஆணை அன்றைய இளம் தமிழ் சமுதாயத்திடம் கையளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து தமிழ் மக்களின் ஆணையை ஏற்று முப்பதாண்டுகளுக்கு மேலாக தொடர்ந்த ஆயுதப் போராட்டத்தில் நடைமுறை தமிழீழ அரசை நிறுவி சிறிலங்கா அரசுக்கு சமாந்தரமான நிழல் அரசை தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் நிலைநிறுத்தியது.
எனினும் 2009 ஆம் ஆண்டில் பல்வேறு நாடுகளின் நேரடி மற்றும் மறைமுக ஆயுத உதவிகளை பயன்படுத்தியும் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட விடுதலைப் போராட்டங்கள் தொடர்பான நிலைப்பாடுகளை சாதகமாக்கியும் கொண்ட சிறிலங்கா அரசு, பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை ஈவிரக்கமின்றி கொன்றும் அங்கவீனப்படுத்தியும் கொடிய இனஅழிப்பு போரை செய்தது.
இக்கொடிய போர் தொடர்ந்தபோது, ஆயுத விடுதலைப் போராட்டத்தின் மூலம் கட்டியமைக்கப்பட்ட தமிழீழ நடைமுறை அரசின் இறைமைக்கான அச்சுறுத்தல் நிலை உணரப்பட்டது. இந்நிலையில் விடுதலைப் போராட்டத்தை நெறிப்படுத்திக்கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையால் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் அரசியல் பலத்தை முன்வைத்து, அரசியல் ரீதியான போராட்டங்களை கூர்மைப்படுத்துமாறு கோரப்பட்டது.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை உலக சமூகத்திற்கு கொண்டுசெல்லும் நோக்கிலும் பயங்கரவாத முலாம் பூசப்ப்பட்ட ஈழவிடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை வெளிப்படுத்தவும் அனைத்து புலம்பெயர்ந்த நாடுகளிலும் வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்வைத்து தமிழ் மக்களின் ஆணையை பெற்றுக்கொள்ளுதல் பொருத்தமானதாக இருக்குமென புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் கருதினர். அதனையே பொருத்தமான வழியென விடுதலைப் போராட்டத்தை தலைமைதாங்கிய தமிழீழ தேசிய தலைவரும் வெளிப்படுத்தினார்.
தாயகத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த விடுதலைப் போராட்டம் ஒரு பயங்கரவாத போராட்டமல்ல என்பதையும் மாறாக அது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைக்கான போராட்டமே என்பதையும் சனநாயக ரீதியில் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக வெளிப்படுத்துவதற்காக வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீளுறுதிப்படுத்தும் தேர்தல் நோர்வேயில் முதன்முதலாக மே மாதம் 10 ஆம் திகதி நடத்தப்பட்டது.
நோர்வே வாழ் ஈழத்தமிழர்கள் 99 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட ஆதரவை வழங்கி வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீளுறுதிப்படுத்தினார்கள். ஏனைய நாடுகளிலும் இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு முன்பதாகவே தமிழீழ நடைமுறை அரசு செயலிழக்கம் செய்யப்பட்டுவிட்டது.
ஆனாலும் தாயகத்தில் வாழும் மக்களின் குரலாக தொடர்ந்தும் ஏனைய நாடுகளிலும் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை செய்வதற்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் உறுதியெடுத்துக்கொண்டனர்.
தாயகத்தில் ஏற்பட்ட பேரழிவை தொடர்ந்தும் அனைத்து தமிழ் மக்களிலும் இயல்பாகவே ஏற்படக்கூடிய வேதனையும் விரக்தியும் உடனடியாக ஏற்பட்டாலும் தொடர்ந்தும் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கப்படவேண்டியதன் அவசியத்தை உணர்ந்துகொண்டனர்.
அதன் தொடர்ச்சியாக 2009 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் பிரான்சிலும், அதே ஆண்டு டிசம்பர் 19 ஆம் திகதி கனடாவிலும் இவ்வாண்டு ஜனவரி மாதம் 23 ஆம் திகதி சுவிஸ்லாந்திலும், ஜனவரி மாதம் 24 ஆம் திகதி ஜேர்மனியிலும் நெதர்லாந்திலும், ஜனவரி மாதம் 30 மற்றும் 31 ஆம் திகதி பிரித்தானியாவிலும், பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி டென்மார்க்கிலும், மார்ச் மாதம் 21 ஆம் திகதி இத்தாலியிலும் இவ்வாக்கெடுப்புகள் வெற்றிகரமாக புலம்பெயர்ந்த தமிழ் மக்களால் நடத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 17 ஆம் மற்றும் 18 ஆம் திகதிகளில் அவுஸ்திரேலியாவில் நடைபெறுவதற்கான வேலைகளில் அவுஸ்திரேலிய தமிழர் கருத்துக்கணிப்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். புலம் பெயர்ந்து வாழும் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட ஈழத்து தமிழ் சமூகத்துடன் இணைந்து – தாயகத்தில் அடக்குமுறைக்குள் வாழும் இரண்டு மில்லியன் தமிழர்களின் குரலாக ஒலித்து – தமது வரலாற்றுக்கடமையை செய்வதற்கு அவுஸ்திரேலிய தமிழர்களும் இணைந்துகொள்ளுகின்றனர்.
சனநாயக ரீதியாக சர்வதேசத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமங்களுக்கு அமைவாக தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகின்ற ஈழவிடுதலை போராட்டத்தின் புதுமையான வடிவமாகவுள்ள வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கான புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலான வாக்குப்பதிவானது வரலாற்றின் பக்கங்களில் நிச்சயம் தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொள்ளும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
- நன்றி: ஈழநேசன்





நமது இனத்தை அழிக்க நம் நாடே இராணுவத்தை அனுப்பியதை மறக்க முடியுமா?; ‘‘தமிழன் என்று பதிவு செய்!’’ : தமிழகத்தில் சுவரொட்டி

தமிழகத்தில் மக்கள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.
நமது இனத்தை அழிக்க நம் நாடே இராணுவத்தை அனுப்பியதை மறக்க முடியுமா? அப்படியிருக்க நாம் ஏன் இந்தியன் என்று குறிப்பிட வேண்டும்?தமிழன் என்றே பதிவு செய்யுங்கள்’’ -இப்படியொரு சுவரொட்டியை தமிழகமெங்கும் ஒட்டி சலசலப்பை கிளப்பியிருக்கிறார்கள் தமிழ் சமூகங்களின் கூட்டமைப்பினர்.
இந்தியம் நம்மைக் கொல்ல இராணுவத்தைக் கூட்டிக் கொடுத்தது... திராவிடம் நம்மைக் கொல்ல நாடகம் ஆடிக் காட்டிக் கொடுத்தது... எனவே, இனச் சொந்தங்களே! மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் மறந்தும் இந்தியன் என்றோ, திராவிடன் என்றோ பதிவு செய்யாதீர்கள். ''தமிழன் என்றே பதிவு செய்யுங்கள்’’
-இப்படியொரு சுவரொட்டியை தமிழகமெங்கும் ஒட்டி சலசலப்பை கிளப்பியிருக்கிறார்கள் தமிழ் சமூகங்களின் கூட்டமைப்பினர்.
இது தொடர்பாக சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் மள்ளர் பேசுகையில்,
‘‘ஆரம்பத்தில் இருந்தே இந்திய அரசாங்கம் தமிழர்களை புறக்கணித்து வருகிறது. ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் பயன்பாட்டு வார்த்தையாக வந்த ‘இந்தியா’ என்ற பெயர் பின்னர் அப்படியே நிலைபெற்றது.
மொழி அடிப்படையில்தான் இந்த கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள வேண்டும். ஆனால் இந்தியாவில் பொதுவாக எந்த மொழியையும் கணக்கெடுப்பில் பின்பற்றுவதில்லை. நமது இனத்தை அழிக்க நம் நாடே இராணுவத்தை அனுப்பியதை மறக்க முடியுமா? அப்படியிருக்க நாம் ஏன் இந்தியன் என்று குறிப்பிட வேண்டும்? திராவிட கட்சிகள் என கூறுபவர்கள் இது வரை தமிழர்களுக்காக என்ன செய்துள்ளனர்?
இலங்கை தமிழர் பிரச்னையில் தமிழகத்தில் உள்ள அனைத்து திராவிட கட்சிகளும் இன்னும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றன. அதனால்தான் மறந்தும் கூட கணக்கெடுப்பில் இந்தியன் என்றோ, திராவிடன் என்றோ குறிப்பிட வேண்டாம் என மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளோம்.
இந்தநிலை தொடராமல் தடுப்பதற்காகவும் அரசியல் மாற்றத்தை கொண்டு வரும் முயற்சியாகவே தமிழகம் முழுவதும் எங்கள் அமைப்பினர் இந்த விழிப்புணர்வு சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர்.
இந்த அமைப்பில் மள்ளர் மீட்பு களம், பறையர் பேரவை, தமிழ்நாடு நாடார் மக்கள் இயக்கம், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, மறத் தமிழர் சேனை, அகமுடையர் அரண் என 10 அமைப்புகள் தங்களை இணைத்து கொண்டு செயல்பட்டு வருகின்றன’’ என்றார்.
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் அமைப்பாளர் உ.தனியரசு இதுபற்றி நம்மிடம் தெரிவிக்கையில்,
‘‘தமிழர்களை இந்தியர்களாக இந்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் ஏற்பட்ட விரக்தியின் வெளிப்பாடுதான் தற்போதைய எதிர்ப்புக்குக் காரணம்.
நாங்கள் இந்தியாவை எதிர்க்கிறோம் என்ற எண்ணத்துடன் இதைப் பார்க்க கூடாது. தமிழர்களின் எண்ணிக்கையை வெளி உலகிற்கு அதிகரித்து காட்டும் முயற்சிதான் இது.
திராவிடன் என்ற வழக்கம் நடைமுறையில் இல்லை. மரபு மொழியாக கருதப்படவில்லை. பொதுவாக ஜாதி ரீதியான கணக்கெடுப்பு நடத்திய பிறகுதான் இட ஒதுக்கீடு தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.
இந்த நிலையில் மக்கள் தொகையில் தமிழர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் காட்டினால் மட்டுமே தமிழகத்திற்கும் தமிழுக்கும் சலுகைகளை பெற முடியும். அதனால் தான் இந்த விழிப்புணர்வு முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
தமிழ் ஆர்வம் கொண்ட எந்த அமைப்பினர் வேண்டுமானாலும் எங்களோடு கை கோத்து செயல்படலாம். அப்போது தான் தமிழகத்தை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் செல்ல முடியும்’’ என்றார்.




தேசியத் தலைவரின் தாயாரை விரட்டியடித்த கருணாநிதியை மன்னிக்குமா தமிழீழம்!!

பிரபாகரனின் தாயார் தமிழகத்தில் நுழைய அனுமதி மறுப்பு
பழ. நெடுமாறன் கடும் கண்டனம் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பெற்ற தாயார் பார்வதி அம்மையார் உடல் நலம் குன்றிய நிலையில் மருத்துவ சிகிட்சைப் பெறுவதற்காக மலேசியாவில் உள்ள இந்திய தூதுவர் அலுவலகத்தில் முறைப்படி விண்ணப்பித்து ஆறு மாத காலத்திற்கு விசா பெற்று இந்தியாவுக்கு இன்று (16.ஏப்ரல்.2010) இரவு 10:45 மணிக்கு விமானத்தில் வந்தார்.
படுத்தப் படுக்கையில் பயணம் செய்த அவருக்குத் துணையாக ஒரு பெண்ணும் வந்தார். அவர்கள் இருவரும் விமானத்தை விட்டுக் கூட இறங்க அனுமதிக்கப்படாமல் வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 80 வயதை எட்டிவிட்ட மூதாட்டி அவர். ஏற்கெனவே பக்க வாதத்தினால் பாதிக்கப்பட்டவர். இத்துடன் தனது கணவரை இழந்த பெரும் சோகத்திற்கு ஆளானவர். சிங்களச் சிறையில் கணவரோடு பல மாதங்கள் அடைக்கப்பட்டு பல் வேறு கொடுமைகளுக்கு ஆளாகி உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டவர்.
பெரும்பாலான நேரங்களில் சுய நினைவை இழந்த நிலையிலே இருப்பவர். சிகிட்சைக்காக அவர் இங்கு வருவதைத் தடுத்துத் திருப்பி அனுப்பியதைப் போன்ற மனித நேயமற்ற கொடுமை வேறு இருக்க முடியாது.இந்திய அரசு ஆறு மாத காலத்திற்குரிய விசாவை இன்று காலையில்தான் அவருக்குஅளித்துள்ளது. ஆனால் அவர் சென்னையில் வந்து இறங்கியவுடன் இரவோடு இரவாக அவரைத் திருப்பி அனுப்பியதற்கு யார் காரணம்? அவர் வருவதை இந்திய அரசு விரும்பவில்லை என்றுச் சொன்னால் விசா வழங்காமலேயே இருந்திருக்க வேண்டும். காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்புவது என்பது அடாத செயலாகும். மீண்டும் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்ளுவதன் மூலம் அவருக்கு ஏதேனும் நேருமானால் அதற்கு தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் இந்திய அரசுமே பொறுப்பாவார்கள்.
அவர்களை வரவேற்று அழைத்துச் செல்ல நானும் வைகோ அவர்களும் சென்றிருந்தோம். அவர் வருகையை நாங்கள் யாருக்கும் தெரிவிக்கவில்லை. அவரது உடல்நலம் மட்டுமே எங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டது. வெளியில் தெரிந்தால் கூட்டம் கூடும். அது அவரது உடல் நலனுக்குக் கேடாக முடியும் என்ற காரணத்தினால் அவர் வருகையை வெளியிடவில்லை.விமான நிலையத்திற்கு வைகோவும் நானும் சென்ற போது நாங்கள் வருவதற்கு முன்பே அங்கு குவிக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான காவல் படையினர் பாய்ந்தோடி வந்து எங்களை வழிமறித்துத் தடுத்தார்கள்.
விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்ட எல்லை வரை நாங்கள் செல்வதற்குரிய அனுமதிச் சீட்டுகள் எங்களிடம் இருந்தன. ஆனால் எங்களைப் பிடிவாதமாக அனுமதிக்க மறுத்து பிடித்துத் தள்ளும் அளவிற்கு காவல்துறையினர் அட்டூழியம் புரிந்தனர். தொடர்ந்த தள்ளு முள்ளுக்கு நடுவேதான் நாங்கள் விமான நிலையத்தின் பார்வையாளர் பகுதியையே அடைய முடிந்தது. விமான நிலையத்தில் தனியான பாதுகாப்புப் படையினர் இருக்கிறார்கள்.
ஆனால் சென்னை புறநகர் காவல்படையினர் அத்து மீறி செயல்பட்டு எங்களைத் தடுத்தார்கள். முதலமைச்சர் கருணாநிதிக்குத் தெரியாமல் இது ஒரு போதும் நடந்திருக்க முடியாது. இந்திய அரசு விசா வழங்கிய பிறகு கருணாநிதியின் வற்புறுத்தலின் பேரிலேயே பார்வதி அம்மையார் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார். இரக்கமற்ற இந்த கொடிய செயலுக்கு அவரே முழுமையான பொறுப்பாளி ஆவார்.
உலகத் தமிழர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தேசியத் தலைவரான பிரபாகரன் அவர்களைப் பெற்றெடுத்தத் தாயாரை, தாய் தமிழகத்தை உரிமையோடு நம்பி வந்த தமிழ் மகளை கொஞ்சமும் இரக்கமில்லாமல் விரட்டியடித்த கருணாநிதியை உலகத் தமிழர்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள்.




இந்தியாவை சிறிலங்கா ஏமாற்றி விட்டதா? சிபிஐ கோரிக்கை ஏற்படுத்தும் சந்தேகம்!

தமிழீழ தேசியத் தலைவர் கொல்லப்பட்டுவிட்டதாக அறிவித்திருந்த சிறிலங்கா, அதனை இந்தியாவிற்கும் தெரிவித்து ஆவணங்களையும் வழங்கிவிட்டதாக கூறியிருந்தது.எனினும், அண்மையில் இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் பிரபாகரனின் மரணச் சான்றிதழை சிறிலங்கா தங்களிடம் வழங்கிவிட்டதென சிபிஐ தெரிவித்தாக கூறியது அந்நாட்டில் பல வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்திருந்த நிலையில், அவ்வாறான உறுதிப்படுத்தும் ஆவணங்களை (மரணச் சான்றிதழ்) வழங்கவில்லை என இந்திய மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) தெரிவித்திருந்தது.இந்நிலையில், தற்போது தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களின் இறப்பு சான்றிதழின் மூல பிரதியினையும் வழங்குமாறு சிறிலங்காவிடம் இந்திய மத்திய புலனாய்வு அமைப்பு எழுத்து மூலமாகக் கோரியுள்ளது.அத்துடன், கே.பி. பத்மநாதன் அவர்களை விசாரணை செய்யவும் அவரது வங்கி கணக்குகளை பரிசீலிக்கவும் உரிய ஏற்பாட்டினை செய்து தருமாறு இந்தியா சிறிலங்காவிடம் மீண்டும் கேட்டுள்ளனர். பத்மநாதன் சிறிலங்கா சென்றடைந்தபோதும் இந்திய அதிகாரிகள் இவ்வாறு கோரிக்கை ஒன்றினை விடுத்தனர்.அதாவது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இவர் இருப்பதால் விசாரிப்பதற்கு அனுமதி கோரியிருந்தது. ஆனால் சிறிலங்கா சாதகமாக பதில் அளிக்கவில்லை என இந்திய மத்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்தது.தற்போது மீண்டும் கே.பியை விசாரிக்க கடித மூலம் உத்தியோகபூர்வமாக கேட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது




புதல்வர் அழகிரியை தமிழ்நாட்டு அரசியலுக்கு கொண்டு வந்துவிட்டு புதல்வி கனிமொழியை அமைச்சராக்க கருணாநிதி திட்டம்

இந்தியாவின் மத்திய அரசு அமைச்சரும் முதல்வர் கருணாநிதியின் புதல்வருமான மு.க.அழகிரி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு விரையில் தமிழ்நாடு மாநில அரசியலுக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான அழகிரியின் தொடர் கோரிக்கையை முதல்வர் கருணாநிதி ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மே மாதம் 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் முதல்வர் கருணாநிதி டெல்லிக்குப் பயணம் மேற்கொள்கிறார் என்று கூறப்படுகிறது. திட்டக் கமி~ன் கூட்டத்திற்காக அவர் செல்லவிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அழகிரி விவகாரம் தொடர்பாகவும் தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் தொடர்பாகவும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் விவாதிக்க இந்தப் பயணத்தை முதல்வர் பயன்படுத்தவுள்ளதாக சென்னையிலிருந்து கிடைக்கும செய்திகள் தெரிவிக்கின்றன.. மே 6ம் தேதி மாலை டெல்லிக்கு கருணாநிதி செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த நாள் அவர் முதலில் சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசுவார். அதன் பிறகு பிரதமர் மன்மோகன் சிங்கையும் கருணர்நிதி சந்திக்கவுள்ளார். திமுகவில் தற்போது வாரிசுப் போர் உக்கிரமடைந்துள்ளது. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த கட்டத்திற்கு உயருவது அவ்வளவு எளிதாக இருக்காது என்று கூறப்படுகிறது. அதை நிரூபிக்கும் வகையில் கட்சித் தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தால் நிச்சயம் நான் போட்டியிடுவேன். எனது உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் மு.க.அழகிரி.இவ்வாறு அழகிரி- ஸ்டாலின் பிரச்சினையைத் தீர்க்க முடியாமல் முதல்வர் கருணாநிதி தவித்து வருகிறார் எனவும் முதல்வர் அலுவலகச் செய்திகள் கசிந்துள்ளன.இந்த நிலையில் அவர் சோனியாவிடம் சில முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கவுள்ளதாக தெரிகிறது.அதன்படி மு.க.அழகிரியை மீண்டும் மாநில அரசியலுக்குக் கொண்டு வருவது. ஆவர் தற்போது வகிக்கும் அமைச்சர் பதவியில் கனிமொழியை அமர வைப்பது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னதாகவே இந்த ஆண்டு இறுதியில் நடத்துவது என்பது குறித்து சோனியாவுடன் கருணாநிதி ஆலோசிக்கவுள்ளதாக சென்னையில் கசிந்துள்ள செய்திகள் தெரிவிக்கின்றன..இந்திய மத்திய அரசுத் தேர்தல் முடிந்து அமைச்சரவை உருவாக்கத்தின்போதே கனிமொழிக்கும் அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அழகிரிக்கு அமைச்சர் பதவியை கேட்டதால் கனிமொழிக்கு இடம் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. தற்போது அழகிரி மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகினால் அவருடைய பதவியை கனிமொழிக்குத் தர காங்கிரஸ் கட்சிக்க எவ்வித சிரமங்களும் இருக்காது என்று கூறப்படுகிறது. தற்போதைய சட்டசபையின் ஆயுள் காலம் அடுத்த ஆண்டு மே மாதம் வரை உள்ளது. ஆனால் தற்போது திமுகவில் நிலவும் பூசல் காரணமாக முன்னதாகவே தேர்தலை நடத்தி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முதல்வர் விரும்புவதாக தெரிகிறது. இதுகுறித்த காங்கிரஸ் தலைவரின் கருத்தை அறிய கருணாநிதி ஆவலாக உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.முன்கூட்டிய தேர்தலுக்கு சோனியா ஒப்புக் கொண்டால் இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இப்படி பல முக்கியமான விவகாரங்களின் பின்னணியில் முதல்வர் டெல்லிக்குச் செல்லவிருப்பது பெரும் எதிர்பார்ப்புகளை திமுக வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.




வன்னியில் பாரிய சிறீலங்கா இராணுவத் தளம்

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் கிட்டத்தட்ட ஓராண்டாக அங்கு மீளவும் குடியமர்த்தப்படாத நிலையில்இராணுவமோ வன்னியின் பல பாகங்களிலும் பாரிய ராணுவத் தளங்களை அமைப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.வன்னி மல்லாவியிலுள்ள பாலி நாகர் மாத்தையா வித்தியாலயத்துக்கு முன்பாக மிகப்பெரிய ராணுவத் தளத்தை அமைப்பதில் நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். அந்தப் பகுதியிலுள்ள சாலைகளில் பல அடுக்குப் பாதுகாப்பையும் அவர்கள் போட்டுள்ளனர்.இதேபோன்ற ராணுவத்தளங்களை அமைப்பதில் பூநகரி மற்றும் அதைச் சூழவுள்ள பகுதிகளிலும் ராணுவத்தினர் மும்முரமாக உள்ளனர். வெகுசில மக்கள் ஏற்கனவே வன்னியில் குடியமர்த்தப்பட்டுள்ளபோதும் அவர்களுக்கு ராணுவத்தினர் பல தொல்லைகளைக் கொடுத்துவருகின்றனர்.இளம் பெண்கள் இருக்கின்ற வீடுகளுக்கும் வலுக்கட்டாயமாக இரவுநேரத்தில் ராணுவத்தினர் உட்புகுந்து அட்டகாசம் செய்வதாக வன்னியிலிருந்து கிடைத்துள்ள செய்திகள் கூறுகின்றன. இதனால் இளம் பெண்கள் ஒன்றாகக் கூடி பாதுகாப்பான இடங்களில் தமது இரவுகளைக் கழிக்கின்ற அச்சமான சூழல் நிலவுகிறது.இதேவேளை அவர்கள் மக்களை இரவில் சுதந்திரமாக நடமாடத் தடையும் விதித்துள்ளனர். அங்குள்ள மக்கள் தினமும் தமது தேசிய அடையாள அட்டைகளைக் கொண்டுதிரிய வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் ராணுவத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது முறைப்பாடுகளை உயர் அதிகாரிகளுக்குக் கொடுத்தால் மேலும் தொல்லைகள் அதிகரிக்கும் என்ற அச்சத்தில் அவர்கள் ஒன்றுமே செய்யமுடியாத நிலையில் உள்ளனர்.மேலும், எமது விடுதலைக்காகப் போராடிய மாவீரர்களைக் கௌரவப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்ட தூபிகள், நினைவு மாடங்கள் என அனைத்தையும் இருந்த இடம் தெரியாமல் அழித்துவிடுவதிலும் ராணுவத்தினர் குறியாக உள்ளனர்




Friday, April 16, 2010

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரன் அலைகள் தளத்தினர்க்கு வழங்கிய நோ்காணல் கேள்வி பதில் வடிவத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் இரண்டாம் பாகம் பின்வருமாறு அமைகின்றது.
கேள்வி: உங்கள் தம்பி வே.பிரபாகரனை எங்கே தேடுவது ?
மனோகரன்: பிரபாகரனை இரண்டு வழிகளில் தேடுகிறார்கள். ஒரு சிலர் அவரை விண்ணில் தேடுகிறார்கள், இன்னும் சிலர் மண்ணில் தேடுகிறார்கள். ஆனால் பிரபாகரன் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் உடல்களில் வீசும் விடுதலைப் பேரொளியாக இருக்கிறார் என்பதுதான் உண்மை. அந்தக் தேடலுக்கான பதிலை தருவதற்கு தகுதியுள்ள ஒருவரை விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து அவர் இதுவரை அடையாளம் காட்டவில்லை என்பதை இனியாவது மக்கள் அறிவால் கண்டுபிடிக்க வேண்டும்.
கேள்வி: விடுதலைப்புலிகள் அமைப்பின் வெளிநாட்டு தொடர்புகளுக்கான பணிகளை தானே செய்வதாகக் கூறிய கே.பத்மநாதன் அத்தருணம் உங்களிடம் என்ன கூறினார்?
மனோகரன்: கே.பி ஊடகங்களில் தோன்றி ஒரு தடவை இறந்துவிட்டதாகவும், இன்னொரு தடவை உயிருடன் இருப்பதாகவும் கூறினார். அவர் மற்றவரில் இருந்து சற்று வித்தியாசமாக விண்ணிலும் மண்ணிலுமாக இரண்டு இடங்களிலும் தேடியிருந்தார்.. இப்படி இரண்டுங்கெட்டான் பதிலை பிரபாகரன் தனது வாழ்வில் என்றுமே கூறியது கிடையாது. கே.பியின் கடமை என்ன.. பிரபாகரனின் உடன் பிறந்த அண்ணன் நான் இருக்கிறேன்.. என்னிடம் ஒரு தடவை கூட அவர் இது குறித்து பேசியது கிடையாது.
கேள்வி: வேறு யாராவது தொடர்பு கொண்டார்களா?
மனோகரன்: தமிழகத்தில் இருந்து பழ.நெடுமாறன் ஒருவர் மட்டும் தொடர்பு கொண்டு பிரபாகரன் இருக்கிறார் என்ற செய்தியை அறிவிப்பதாகக் கூறினார். மற்றப்படி யாருமே இது குறித்து என்னுடன் இன்றுவரை பேசியது கிடையாது. ஒருவரிடமும் இந்தக் கேள்விக்கு பதில் இல்லை.
கேள்வி: அப்படியானால் இந்தக் கேள்விக்கான பதிலை எங்கிருந்து தேடுவது? மனோகரன்: பிரபாகரன் வாழ்வில் இருந்துதான் தேடிக் கொள்ள வேண்டும். நான் உங்களிடம் முன்னரே குறிப்பிட்டிருந்தேன் என் தம்பி எல்லாள மன்னன் சமாதி இருந்த இடத்தில் கருவுற்றவர் என்று. அதுபோலவே மானமுள்ள தமிழுக்காகவும், உயர் தமிழ் வீர ஒழுக்கத்திற்காகவும் அவர் வாழ்ந்தார். சங்ககால பாடல்களில் கண்ட உயர்ந்த அப்பழுக்கில்லாத வீரத்தை எல்லாள மன்னன் போற்றினான். தள்ளாத வயதிலும் உயிரச்சமின்றி தனிச்சமருக்குப் போன வீரன் எல்லாளன். அதுபோல பிரபாகரன் உருவாக்கிய விடுதலை வீரர்கள் அனைவருமே இருபதாம் இருபத்தியோராம் நூற்றாண்டுகளில் சங்ககால வீர வாழ்வை வாழ்ந்தார்கள். புறநானூற்றில் கண்ட வீரத்தை நிஜ வாழ்வியல் ஓவியங்களாக மாவீரர்களை வைத்தே வரைந்தும் காட்டினார். இயற்கையாகவே பிரபாகரன் ஓர் ஓவியர் என்பதும் உங்களுக்குத் தெரியும். எனவேதான் அவர் வாழ்வும் புறநானூற்று தமிழ் வீர வாழ்வும் ஒன்றுதான் என்பதைப் புரிய வேண்டும்.
கேள்வி: இது அவர் வாழ்வின் முற்பகுதிவரை நகர்ந்து போகும் நிகழ்வு. எதிரிகளின் நீரைக் குடித்து உயிர் வாழாத சேரன் செங்குட்டுவனின் வீரம் திலீபனிடம், திருமணமான அன்றே போருக்கு போன புறநானூற்று வீரம் குமரப்பாவிடம் என்று சுத்தமான தமிழ் வீரத்தை அவர் படைத்தார். கரிகாலன் என்ற பெயருடன் அவர் வாழ்ந்த வாழ்வு எங்களுக்கும் தெரியும், இருப்பினும் அவருடைய வாழ்வின் பிற்பகுதி புறநானூற்றின் இறுதிப்புள்ளியின் தாக்கம் தெரிகிறதே..?
மனோகரன்: கடைசியில் நடைபெற்ற புதுமாத்தளன் போர்க்களமும் மாங்குடி மருதனார் பாடிய சங்க காலப் போர்க்களமும் வேறு வேறல்ல. வெட்டி எடுக்கப்பட்ட முடித்தலைகள் அடுப்பாக.. பிளக்கப்பட்ட கபாலங்கள் பாத்திரமாக.. அதற்குள் இரத்தமும் சதையும் நிணமும் இட்டு, வெட்டிய கைகளை அகப்பையாக.. துளாவி ஒரு போர் யாகம் நடந்தினான் பாண்டிய மன்னன் என்று பாடியுள்ளார்கள். அதைத்தான் புதுமாத்தளனில் கண் முன் கண்டு துடிதுடித்தோம். உண்மையில் அது புறநானூற்றுப் போர்க்களம்தான். கேள்வி: இருக்கலாம் இருந்தாலும் இப்போது உருவாகியுள்ள நிலை புறநானுற்றில் இருந்து சிறிது வேறுபடுகிறதே.. ? வெற்றிடத்தால் ஒரு போர் என்ற புதிய கோட்பாடு தெரிகிறது… உங்களுக்கு அது தெரிகிறதா ?
மனோகரன்: உங்கள் கேள்வி எனக்குப் புரிகிறது.. வெற்றிடத்தால் ஒரு போர்… அதற்கான பதில் அவர் படித்த நூலில் இருக்கிறது. ஒரு மனிதனின் நல்ல நண்பன் அவன் படிக்கும் நல்ல நூல்தான் என்று கூறுவார்கள். பைபிள் படித்தவர்கள் பைபிள் போலவே வாழ முயற்சிப்பதும், மார்க்சியம் படித்தோர் மார்க்சிய வாதிகளாக வாழ்வதும் ஏன்.. அவர்கள் படித்த நூலின்படி வாழ முயற்சிக்கிறார்கள் என்பதே அதன் பொருளாகும். அதுபோலத்தான் பிரபாகரனும் வாழ்வின் வேதமாக நேதாஜி சுபாஸ்சந்திரபோஸின் வாழ்க்கையை கடைப்பிடித்தார். நேதாஜியின் கடமை உணர்வு மிக்க, ஒழுக்கம் குறையாத ஓர் இராணுவத் தொண்டர்களை அவர் வடிவமைத்தார். நேதாஜியின் இறுதிக்காலத்தில் அவர் எங்கே என்ற கேள்விக்கு பதில் இல்லமல் போனது.. இப்போது பிரபாகரன் விரும்பிப் படித்த நேதாஜியின் வாழ்வியல் தத்துவம் அவரை வழி நடாத்தியிருப்பது தெரிகிறது.. இது புறநானூற்றில் இருந்து வேறுபட்ட இடமாகும்… நேதாஜி கதை படித்து, அவர் வாழ்வின் பிற்பகுதி போன்ற தோற்றத்தை கடந்த ஓராண்டு காலமாக வைத்திருக்கிறார்…பிரபாகரன். அதிலும் ஒரு போராட்டம் மறைந்திருக்கிறது.. அதுதான் புதிய புறநானூற்றின் அதிசயமான பக்கம் அதற்குப் பிறகு வருகிறேன்.. தாயின் மணிவயிற்றில் கருவாக இருக்கும்போது பாரதக்கதை கேட்டு போர் வீரனானான் அபிமன்யு, அதுபோல எல்லாளன் கதையை தாயின் வயிற்றில் இருக்கும்போதே கேட்டு அவர்போல தமிழ் வீரரானார் பிரபாகரன். என்று முன்னர் கூறியிருந்தேன். பின்னர் மறுபகுதியை கூறுகிறேன்..
கேள்வி: சரி நம்மை விடுங்கள்.. மத நம்பிக்கை உள்ளவர்கள் நம்மில் பலர் உள்ளார்கள்.. அவர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் ஏதாவது சாஸ்திரங்கள் கேட்டுள்ளீர்களா..அதுவும் வாழ்வில் ஒரு கடமையல்லவா ?
மனோகரன்: சாஸ்த்திரங்கள் என்பவை தனிப்பட்டவரின் நம்பிக்கைகளால் எல்லைப் படுத்தப்படுவது. ஆனால் போராட்டம் ஆரம்பித்த காலத்திலேயே தமிழகத்தின் பிரபல ஜோதிடர் ஒருவர் பிரபாகரனின் பிற்கால வாழ்வு மர்மம் நிறைந்தாக இருக்கும், யாரும் அவரைக் காண இயலாது என்றும்.. அவர் எங்கே என்ற கேள்வி பெரும் மர்மமாகவே இருக்கும் என்றும் தெரிவித்தார். நாம் அப்போது அதை பெரிதாக கருதவில்லை, ஆனால் இப்போது அதையும் எண்ணிப்பார்க்கிறேன்.. அதற்குமேல் பிரவேசிக்கவில்லை.
கேள்வி: போரின் பின் பிரபாகரன் உடலம் போன்ற ஒன்று காண்பிக்கப்பட்டது, அதை ஏன் நீங்கள் பொறுப்பெடுக்கவில்லை.. ?
மனோகரன்: அது உண்மையாகவே பிரபாகரன் உடலம் என்று எரிக் சோல்கெயம் ஆவது உறுதி செய்தாரா இல்லையே.. சரி அதைவிடுங்கள் அது பிரபாகரனன் உடலம்தான் என்றால் அதை ஏன் சில நாட்களாவது பாதுகாத்து வைத்திருக்கவில்லை. ஏன் உடனடியாக எரியூட்டினார்கள்; ? இப்படியான குழப்பகரமான நிலையில் நாம் மட்டும் ஓடிச் சென்று பொறுப்பேற்றால் என்ன நடக்கும் ? தவறான ஓர் உடலத்தைக் காட்டி நாமே அதை உறுதி செய்துவிட்டதாக அரசு பிரச்சாரம் செய்யும்.. அத்தகைய பொறிக்குள் சிக்குண்டால் அது பெரிய முட்டாள்தனமான செயலாக அல்லவா முடியும் ? அதைத்தான் விடுங்கள்… எனது தந்தை இருக்குமிடத்தை அவர் இறக்கும்வரை ஏன் சிறீலங்கா அரசு இரகசியமாக வைத்திருந்தது.. இப்படிப்பட்ட சிறீலங்கா அரசு நம்பிக்கைக்குரியது என்று கருதுகிறீர்களா ? சிறீலங்காவின் கதை கேட்டு, இந்தியாவிலேயே ப.சிதம்பரம் ஒருவிதமாகவும் சி.பி.ஐ இன்னொரு விதமாகவும் அறிக்கை விட்டதை நீங்களும் அவதானித்திருப்பீர்கள்.. இதை எல்லாம் தொகுத்துப் பார்த்தால் அன்று நாம் ஏன் உரிமைகோரத் தயங்கினோம் என்ற கேள்விக்கான நீதியுடைய பதில் உங்கள் உள்ளத்தில் உருவாகும்.
கேள்வி: சரி அதற்குப் பிறகு வருகிறோம்… உங்கள் சகோதரன் பிரபாகரன் உங்களுடன் தொடர்பு கொள்வதுண்டா.. ?
மனோகரன்: ஆம் அவர் போர் இறுக்கமடைவதற்கு முன்னர்வரை என்னுடன் தொடர்பில் இருந்தார். குறித்துக்கொள்ளுங்கள்… குடும்ப விவகாரங்களை மட்டும் என்னுடன் பேசிக் கொள்வார். சாள்ஸ் சிறந்த முறையில் படித்து எட்டுப்பாடங்களிலும் அதிவிசேட சித்திபெற்று, கட்டுப்பெத்தை தொழில் நுட்பக்கல்லூரிக்கும் தேர்வானபோது அந்த மகிழ்வை சொல்ல எடுத்தார். இப்படி குடும்பத்தின் ஒவ்வொரு நல்ல நிகழ்வையும் அவர் என்னுடன் பேசிக்கொண்டிருந்தார்.. வாழ்வு – தாழ்வு – இன்பம் துன்பம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டார்..
கேள்வி: புதுமாத்தளன் சம்பவங்கள் நடைபெற்றபோது அவர் உங்களுடன் தொடர்பு கொள்ளவில்லையா..?
மனோகரன்: தொடர்பு கொள்ளவில்லை.. குடும்பத்தின் நன்மை தீமைகளை பேசியவர்.. சாள்ஸ் இறந்தாக காண்பிக்கப்பட்டபோது மட்டும் ஏன் என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை. அதுவும் குடும்ப நன்மை தீமைகளுக்குள் வரும்தானே.. மேலும் அப்போது நடேசன் பலருடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்.. அவர் மூலமாகவேனும்; அந்தச் செய்தியை ஏன் என்னிடம் கூறவில்லை. ஆம்.. அப்படியான நிகழ்வுகள் நடந்திருந்தால் குறைந்தபட்சம் நடேசன் மூலமாவது எனக்கு சொல்லியிருப்பார். மேலும் அப்போது எனது தந்தை அங்கே இருந்தார்.. அவராவது அந்தச் செய்தியை கண்டிப்பாக எனக்குச் சொல்லியிருப்பார். யாருமே என்னிடம் எதுவும் கூறவில்லை, எல்லோரின் கைகளிலும் தொலைபேசி இருந்தது, அது செயற்பட்டுக் கொண்டுதான் இருந்தது. பிரபாகரனின் மனைவி எம்முடன் தொடர்பில் இருந்தவர்.. அவர் கூட போன் செய்யவில்லை… ஏன் .. நன்றாக யோசித்துப் பாருங்கள்.. எல்லாவற்றையும் யோசித்தால் எங்கோ ஓர் இனம்புரியாத இருள் விளக்கமின்றி இருப்பது தெரிகிறதல்லவா?
கேள்வி: உண்மைதன்… சரி .. உங்கள் தம்பி பிரபாகரன் ஆடம்பர வாழ்வு வாழ்கிறார்.. நீச்சல் தொட்டியில் குளிக்கிறார் என்று படங்கள் வெளியாகின அதுபற்றி என்ன சொல்கிறீர்கள்.. ?
மனோகரன்: உங்களிடம் முன்னரே சொல்லியிருக்கிறேன்.. அவர் தமிழழேந்தியிடமிருந்து மாதச் சம்பளம் வரவில்லை என்பதால் மகனுக்கு சிறிய விளையாட்டு சாமானையே வாங்கிக் கொடுக்க முடியாது யோசித்தவர். எளிமையின் வடிவமாக வாழ்ந்தவர். பொதுமக்களின் சொத்தை சுய தேவைக்காக பாவிக்கும் பழக்கம் தெரியாதவர். இரத்தம் சிந்திய மாவீரருக்காக தேடிய பணத்தை தொடுமளவிற்கு இதயமற்றவர்கள் உலகில் இருப்பார்கள் என்று கருதும் தகவல் அவர் மூளையில் இல்லவே இல்லை. எனவே பொதுப்பணத்தில் ஆடம்பர வாழ்வு என்ற பேச்சுக்கே அவர் வாழ்வில் இடமில்லை. ஆனால் பேச்சு வார்த்தை நடைபெற்ற காலத்தில் அவரைப் பார்க்க குடும்பத்தினர் இங்கிருந்து சென்றார்கள். அவர்கள் டென்மார்க்கில் பிளாஸ்டிக் பையில் செய்யப்பட்ட மிகமிக விலை குறைந்த 100 குறோணர் விலையுள்ள ஒரு தண்ணீர் தொட்டியை கொண்டு சென்று கொடுத்தார்கள். அதுதான் சிறீலங்கா அரசு பிரச்சாரம் செய்த ஆடம்பர வாழ்வு. அதைத் தான் நம் தமிழ் உறவுகளும் இணையங்களில் போட்டு பிரச்சாரம் செய்தார்கள். ஒரு தூய போராளியின் வாழ்விற்கும் தனது வாழ்விற்கும் இடையில் யாதொரு வேறுபாட்டையும் அவர் வைக்கவில்லை. அந்தப் பிரச்சாரங்களை எல்லாம் இன்று பிரபாகரன் முறியடித்துவிட்டார்.
கேள்வி: சரி.. பிரபாகரன் இருக்கிறார்.. அவர் தற்போது வெளிப்படவில்லை.. என்று வைத்துக் கொள்வோம்.. இந்த நிலையில் யார் பேச்சைக் கேட்பது இப்போது எண்ணற்ற தலைவர்கள் தேன்றிவிட்டார்களே ?
மனோகரன்: பிரபாகரன் தனக்குப் பின் யாரென ஒருவரை தெரிவு செய்திருந்தால் இப்படி பெருந்தொகையானவர்கள் தோன்றியிருக்க மாட்டார்கள். அவர்கள் தாமே பிரபாகரனின் குரல் என்றும் கூறியிருக்க மாட்டார்கள். இப்போது பிரபாகரன் எடுத்த பணிகளை நாமே தொடர்கிறோம் என்று கூறும் யாரிடமும் அவர் எங்கே என்ற கேள்விக்கு பதில் இல்லை.. ஆகவே இவர்கள் அனைவரும் பிரபாகரனின் தேர்வில் இல்லாதவர்களே என்பது தெளிவு. பிரபாகரனின் உண்மையான உறுதியான குரல் இன்னமும் வரவில்லை.
கேள்வி: வட்டுக்கோட்டைத் தீர்மானம் வாக்கெடுப்பில் உள்ளதே.. ?
மனோகரன்: வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பது அன்றைய தமிழர் கூட்டணியினரால் எழுதப்பட்ட ஒரு காகிதத் தீர்மானம். அதனடிப்படையில் தாயகத்தில் ஒரு தேர்தலும் நடைபெற்று முடிந்துவிட்டது. ஆனால் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் இருந்ததைவிட சிறந்த தமிழீழ அரசை பிரபாகரன் உருவாக்கி முடித்திருந்தார். கடற்படை, ஆகாயப்படை, போலீஸ்பிரிவு, வங்கித்துறை, தரைப்படை, தமிழீழ நிர்வாகம் என்று சட்டம் – நீதி- நிர்வாகம் ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய சட்டவாட்சியை வள்ளுவர் காட்டிய நெறியோடு வரையறை செய்து வழங்கிவிட்டார். உலகிற்கே ஒரு முன்மாதிரியான தேசத்தை உருவாக்கி சாதனையும் படைத்துவிட்டார். அதைத்தான் நீங்கள் எல்லோரும் வன்னியில் கண்கூடாக பார்த்துவிட்டீர்கள். தென்னை மரத்தில் ஏறி வட்டுவரை சென்றுவிட்ட ஒருவன் அதிலிருந்து கீழே இறங்கி என்னால் தென்னையின் வட்டுக்கொள்ள முடியுமா என்று கேட்டு வாக்கெடுப்பு வைத்தால் எப்படியிருக்கும் ? இப்படியொரு கேள்விக்கு பதில் ஒன்று தேவையா? இதற்கு பதில் கூறத்தேவையில்லை. சில கேள்விகளுக்கு மேல் வைக்கப்படும் கேள்விகளே அதற்குரிய பதில்களாக அமையும் இதுவும் அந்தவகை சார்ந்ததே.
கேள்வி: அப்படியானால் இப்போது நாடுகடந்த தமழீழஅரசு என்ற இன்னொன்று வருகிறது.. அதுபற்றி என்ன கூறுகிறீர்கள் ?
மனோகரன்: நமது நாட்டில் இப்போது உங்கள் வீட்டை நீங்களே போய் பார்க்க வேண்டுமானால் உங்கள் வீட்டுக்கான உறுதியைக் கொண்டு போக வேண்டும். ஆளில்லாமல் கிடக்கும் உங்கள் வீட்டை நீங்களே பார்க்க உறுதி வேண்டும்.. மறந்துவிடாதீர்கள் வாழ்வதற்கல்ல ஒரு தடவை பார்ப்பதற்கு.. உறுதி இல்லாவிட்டால் உங்களை உங்கள் வீட்டிற்கே இராணுவம் அனுமதிக்க முடியாத நிலை இருக்கிறது. பிரபாகரன் வாழ்ந்த வீட்டை சிங்கள மக்கள் பார்ப்பதால் அது இடிக்கப்படுகிறது.. அதற்கும் உறுதி வேண்டுமோ என்னவோ.. ( சிரிப்பு ) நமக்கு உரிமை எங்கே இருக்க வேண்டும் எம் தாயகத்தில்.. வெளிநாடுகளில் வாழ்வோருக்கு சட்டரீதியான வாழ்வியல் உரிமை இருக்கிறது.. ஆனால் நமது தாயகத்தில் சொந்த வீட்டுக்கே போக உரிமையற்று மக்கள் முகாமில் இருக்கிறார்கள். இப்படியான யதார்த்த நிலை இருக்கிறது.. இந்நிலையில் நாடுகடந்த அரசால் சொந்த வீடு கடந்து போவதற்காவது ஓர் உரிமையை பெற்றுத்தர முடியுமா? பிரபாகரன் வெளிநாட்டில் ஓர் அரசை அமைக்கவா போராடினார்.. நாடுகடந்த அரசுபற்றிய கேள்விக்கும் பதிலாக கேள்விகளையே வைக்க முடியும் என்பதை நீங்கள் இப்போது புரிந்திருப்பீர்கள்.. இவைகள் இரண்டும் பிரபாகரன் சொன்ன பாதைகளா என்பதை பிரபாகரன் நேசித்த மக்கள் தீர்மானிப்பார்கள். நாம் பதில் கூற வேண்டிய தேவை இல்லை.
கேள்வி: அப்படியானால் இன்றைய நிலையில் என்னதான் செய்வது ? மனோகரன்: எனது தம்பி பிரபாகரன் தமிழர் சமுதாயம் பிளவுபடக்கூடாது என்பதற்கே முன்னுரிமை கொடுத்தார். புதுமாத்தளனுக்குப் பின்னர் புலம் பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு செயலும் தமிழினத்தை பிளவுபடுத்துவதாகவே இருக்கிறது. இத்தகைய முன்னெடுப்புகள் பற்றி கருத்துக் கூறுவதைவிட அவற்றின் விளைவுகளை மட்டுமே நாம் பார்க்க வேண்டும். வடக்குக் கிழக்கில் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளின் எண்ணிக்கை, வெளிநாடுகளில் ஆளுக்காள் உருவாக்கியுள்ள தமீழழம் தொடர்பான பணிகள். இவை அனைத்தும் தமிழினத்தை ஒற்றுமைப்படுத்தியிருக்கின்றனவா இல்லை கூறுபோட்டுள்ளனவா என்பதை அவதானிக்க வேண்டும். ஒரு செயல் தமிழினத்தை கூறுபோடுமாயின் அது பிரபாகரனின் விருப்பமாக அமைய மாட்டாது. பிரபாகரன் யாரையும், எந்தத் தளபதியையும் முக்கியமாக முன்னிலைப்படுத்தியது கிடையாது. காரணம் அவருடைய முதன்மைத் தளபதிகள் தமிழீழ மக்களே.. மக்களுக்கு தெரியும் பிரபாகரன் யார் என்பது.. பிரபாகரன் உருவாக்கிய மக்கள் சக்தி மாவீரர்களின் மகத்தான கனவுகளுக்கே சொந்தம், மற்றவருக்கல்ல.. இத்தனை காலம் போராடி, ஒவ்வொரு நொடியும் மரணத்தோடு விளையாடி, வாழ்வுக்காலத்தின் பெரும்பகுதியை தலைமறைவு வாழ்விலேயே கழித்த பிரபாகரன் தனக்காக எதையுமே கேட்கவில்லை. எத்தனையோ பதவிகள் வந்தன, எதையுமே ஏற்கவில்லை.. இன்று மாபெரும் துறவறம் போன்ற வாழ்வை எழுதியுள்ளார்.. அப்படிப்பட்டவர் இப்படியான காரியங்களை செய்யுங்கள் என்று யாரிடமும் கூறியிருக்க மாட்டார்..
கேள்வி: சரி இப்படியான குழப்ப நிலை வருமென்று கருதி பிரபாகரன் தனது பிள்ளைகளில் ஒருவரையாவது உங்களுடன் அனுப்பியிருக்கலாமே ? மனோகரன்: நான்தன் சொல்லிவிட்டேனே.. அவர் பற்றற்ற வாழ்வு வாழ்ந்தவரென்று.. மற்றவர்களின் பிள்ளைகள் போராடும்போது தன் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளார் பிரபாகரன் என்று திட்டினார்கள். பிரபாகரனிடம் நான் இதுபற்றி பேசியுள்ளேன். என் வாழ்வு இருக்கும்வரை, நான் நேசித்த ஈழ மண் இருக்கும்வரை என் பிள்ளைகள் வாழ்வு என்னுடன்தான் என்றார்.. தன் வாழ்வு முடிந்தால் தன் பிள்ளைகளின் வாழ்வும் அதுவாகவே முடியும்.. ஒவ்வொரு போராளியும் பிரபாகரனின் பிள்ளைகள்தான், ஒவ்வொரு தமிழீழ குடிமகனும் அவருடைய உறவுதான். தன் பிள்ளை மாற்றார் பிள்ளை என்ற பேதம் பார்த்து வாழும் ஒருவரா பிரபாகரன் இல்லையே.. தன் பிள்ளைகளை வெளிநாடு அனுப்பி பேதம் காட்டுமளவிற்கு அவர் உள்ளம் ஒளி குன்றியதல்ல. இதுதான் எனது உள்ளம் என்று எந்தத் தளபதியை வைத்தாவது உங்களுக்கு அவர் சொன்னாரா அல்லது அன்ரன் பாலசிங்கத்தை வைத்தாவது சொன்னாரா இல்லையே.. அவர் தனது கொள்கையை சொற்களால் சொல்லாது வாழ்ந்து காட்டிய செயல் வீரர்.. இப்போது பிரபாகரனின் பிள்ளைகளையும், போராளிகளையும் பிரித்து பேசியோர் வாயடைத்துக் கிடக்கிறார்கள்.. இப்போது பிரபாகரனின் பிள்ளைகள் யார் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும் இவர்களில் யாரை அவர் வெளிநாடு அனுப்புவது சொல்லுங்கள் பார்க்கலாம்..
கேள்வி: புரிகிறது.. இந்த உண்மையை இதுவரை யாருமே சுட்டிக்காட்டவில்லை.. இவைகளைக் கேட்கும்போது இந்த இனத்திற்கு மறுபடியும் பிரபாகரன்தான் வர வேண்டும் என்ற எண்ணமே உருவாகிறது.. அவர் வருவாரா ?
மனோகரன்: புதுமாத்தளனுக்குப் பின் போராட்டத்தின் அடுத்த கட்டம் என்ன ? எம்மை நம்பிய தமிழீழ மக்களுக்கு நாம் சொல்ல வேண்டிய பதில் என்ன ? ஆகிய கேள்விகளுக்கு உரிய பதில் இல்லாமல் பிரபாகரன் தன் வாழ்வை ஒரு போதும் வெற்றிடமாக்கியிருக்க மாட்டார். புதுமாத்தளன் நிகழ்விற்கு சில நாட்கள் முன்னதாக நடேசனிடம் ஒரு செய்தியை தெரிவித்தார்… அது புலிகளுக்கு பிறகு வெற்றிடம் என்பது இல்லை என்ற செய்திதான்… அதற்குப் பிறகு பிரபாகரனின் கருத்துக்கள் எதுவும் வெளியாகவில்லை.. எனவே அன்று வெற்றிடமில்லை என்று கூறியவர் அதற்கான பதிலைத் தராமல் தன் பணியை ஒருபோதும் முடித்திருக்க மாட்டார். ஒன்றுமில்லாத வாய்ப்பேச்சு வீரரின் வெற்றிடத்தில் விடுதலைப் புலிகளை உருவாக்கியவர் பிரபாகரன். புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்ற முடிவுரையை எழுதிவிட்டே போராட்டம் என்ற முதல் அத்தியாயத்திற்குள் போனவர் பிரபாகரன்.. இப்போது அவர் நேதாஜிபோல ஒரு வெற்றிடத்தை தன் வாழ்வில் எழுதியுள்ளார் என்று முன்னர் கூறியிருந்தேன். இப்போது மறுபடியும் அந்த இடத்திற்கே திரும்பி வருகிறேன்.. அன்று நேதாஜி ஒரு வெற்றிட நிலையை உருவாக்கி, அதன் மூலம் இந்திய சுதந்திரத்தை ஏற்படுத்தினார் என்பதுதான் நேதாஜி கதையின் வெற்றிடத்தில் நிற்கும் மர்மமான உண்மை. பிரபாகரனும் அதே முடிவுரையைத்தான் எழுதியுள்ளார். தமிழ் மக்களின் கனவுகளை நினைவாக்க அவர் இருந்தும் போராடுவார் இல்லாமலும் போராடுவார்.. மறுபடியும் வெற்றிடம்.. வெற்றிடத்தில் யார் வருவார்… மேலும் வசனங்களில் வேண்டுமா இல்லை போதுமா ?
கேள்வி: நன்றி, வணக்கம். உங்கள் பேட்டி உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது..?
உங்களை மறுபடியும் அவ்வப்போது சந்திக்க இருக்கிறோம் .. மனோகரன்: வாருங்கள்.. என் தம்பிபற்றி சொல்ல என் இதயத்தில் மேலும் ஏராளம் செய்திகள் உண்டு. வெல்வோம் வணக்கம்.




தமிழீழம் தமிழருக்கு உரித்துடையதா? ஒரு குறுக்கு வெட்டு முகப்பார்வை. "வரலாற்றை அறியாதவன் சமூகம் அழிந்துவிடும்" -கவிஞர் இக்பால்

ஒரு உடமையின்பால் உரிமை கொண்டாடுகையில் அவ்வுடமையின் உரிமைத்துவம் சார்பான அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்கள் வெளிப்படுத்தல் அவசியம். இது யாவற்றுக்கும் பொருத்தமாகும். அதாவது,
இலங்கையில் உள்ள தமிழர் வாழ்விடமான தமிழீழ பிரதேசம் உண்மையிலே தமிழ்மக்களுக்கு உரித்துடையதா? உரித்துடமை உள்ளதென்றால் அதற்கான ஆவணங்கள் (குறைந்த பட்சமாவது) ஒப்புவிக்கப்படுமா? அல்லது, 'தமிழீழம் தமிழரின் தாயகம்' என முன்னோரிலிருந்து இந்நாளிலுள்ளவர் வரைக்கும் கூறப்படும் வாய்ப்பாடு என்பதால் அது தமிழரின் தாயகமாகிவிடுமா? அல்லது, எமக்கான போரியல் குழுமங்கள் போரிட்டதால் அது நியாயமாகத்தான் இருக்கும் என குத்து மதிப்பில் ஏற்றுக்கொண்டோமா? இதுபோன்ற வினாக்களுக்கு எம்மில் பெரும்பாலானோர், குறிப்பாக இன்றைய இளம் சமுதாயத்தினர் விடை கண்டறிதல் வேண்டும். இதன் நியாயப்பாடுகளை குறைந்த பட்சமாவது அறிந்திருக்கும் பட்சத்தில்தான் துணிந்து எமது உரிமைத்துவத்தை சர்வதேசத்திடமோ அல்லது, ஏன் தமிழரோடு முரண்படும் சிங்கள மக்களுக்கு அதிலும் சிங்கள புத்தி ஜீவிகளுக்கு (அரசியல் வாதிகளல்ல) வரலாற்று ஆவணங்களோடு நிரூபிக்கும் பட்சத்தில் சிங்கள மக்களின் நியாயவாதிகள் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை. எமது தமிழீழத்திற்கான போராட்டத்தை அறிவியல் பூர்வமாக வெளிப்படுத்துவதில் தான் 'தமிழீழ போராட்டம்' வெற்றி பெற வாய்ப்புண்டு. இதையே கருக்கோளாகக் கொண்டு விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் உரையின் பல இடங்களில் போராட்டம் வேறுவடிவம் பெறவேண்டும் என்றும், போராட்டம் புலம்பெயர் மக்களிடையே விடப்படுகிறதென்று கூறியதும் கவனிக்கத்தக்கது. 'போராட்டம் வேறுவடிவம்' என்பது தற்போது ஆயுதப் போராட்டத்திற்கு சாத்தியமில்லை. (எதிர்காலத்தில் முனைப்புப் பெறாது என்று அர்த்தம் கொள்ளலாகாது) ஆகவே, அதுவானது அறிவியல் சார்ந்த ஜனநாயகப் போராட்டம் என்றே பொருள் கொள்ள வேண்டும். அடுத்ததானது, 'போராட்டமானது புலம் பெயர் மக்களிடையே விடப்படுகின்ற' தென்பது புலம்பெயர் மக்கள் ஆயுதங்கள் சுமந்து தமிழீழ மீட்புக்காக ஈழம் செல்ல வேண்டும் என கருத்துக் கொள்ள முடியாது. அதுவானது, சர்வதேச அமைப்புக்களின் சிந்தைக்கு எட்டும் படியாக எமது போராட்ட நியாயங்களை தர்க்க ரீதியாகவும், அறிவியல் பூர்வமாகவும் சாத்வீக முறையில் எடுத்தியம்பி நியாயப்படுத்தலே ஆகும். இந்த இரு விடயங்களிலும் புலம் பெயர் மக்கள் மிகத்தெளிவாக இருக்கவேண்டும். இவற்றில் வெற்றி காண்பதே நோக்காக கொள்ள வேண்டும்.
இதற்கான காரணம் யாதெனில்,

தமிழீழ தாயகத்தின் மக்கள், விலங்குகளுக்குப் பயந்து சூழ்நிலையின் கைதிகளாக மௌனித்து கிடக்கிறார்கள். அவர்களால் வாய்திறந்து நியாயம் சொல்ல, சுதந்திரமும் வலிமையுமற்று வாழ்கிறார்கள். இதற்கான பெரும் கடமை யாதெனில் மேதகு பிரபாகரன் அவர்களால் சுட்டி உரைக்கப்பட்ட (மேற்கூறிய) இந்த எடுகோள்களை, கருத்தியல் இலட்சியமாக கொண்டு எம் பணிகளை தொடரவேண்டும். தமிழீழம் சார்பான தரவுகளில் நியாயப்பாடு தென்படுதல் அவசியமாகும். அந்தத் தரவுகளாவன, கருத்தியல் இலட்சியத்திற்கு அறிவியல்பூர்வமாக அமைதல் வேண்டும். அதனால், தமிழீழ உரிமைத்துவம் சம்பந்தமான தரவுகளை அறிந்த புத்திஜீவிகள் எழுத்துருவில் வெளிக்கொணரவேண்டும். அதில் நியாயங்கள் நிறுவப்படல் வேண்டும். அதற்காக, நம்பமுடியாத, யதார்த்தத்திற்கு ஒவ்வாத அற்புத சக்திகளைக்காட்டும் புராண இதிகாசங்களூடாக நியாயங்களை நிறுவ முற்படலாகாது. அவை தோற்றுப்போய்விடலாம். அத்தோல்வியானது என்றுமே 'எழும்பமுடியாத' தோல்வியாகக் கூட அமைந்துவிடலாம் என்பதில் கவனம்கொள்ளல் அவசியம். ஆதலால், தமிழீழம் சார்ந்த ஒரு 'எள்ளுப்பொரி' தகவலை தருவது பொருத்தமாக அமையும் என எண்ணுகிறேன்.

றொபேட் நொக்ஸ்(Robert Knox) கண்ட கைலாய வன்னியன். மேலைநாட்டவர்கள் இலங்கையின் மீது மோகம் கொள்ள பல காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணங்களாக அறியப்படுவது வளங்களும், வணிகமும் எனலாம். இதற்கு தேவையான மூலங்கள் கடலும், கங்கை சார்ந்த நிலமும், ஏற்றுமதி இறக்குமதி வணிகத்திற்கான துறைமுகங்களுமாகும். இவை அதிகமாகக் காணப்பட்ட இடங்கள் தமிழரின் தாயகப்பிரதேசங்களே ஆகும். குறிப்பாக, ஆசியக்கண்டத்தின் திறவுகோல் என அழைக்கப்படும் இயற்கை துறைமுகமான திருக்கோணமலை மேலைத்தேய நாட்டவர்களின் கண்களில் பன்னெடும் காலமாக குத்தி நின்றது. இத்துறைமுகமானது வணிகத்திற்கும், எதிரிகளுடன் போர் செய்யவும் வசதிகள் கொண்டதாக அமைந்திருந்தது. துறைமுக வளத்திலே 'மாதோட்டம்' துறைமுகமும் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த இரு துறைமுகங்களையும் தாலமி(PTOLEMY) என்னும் கிரேக்க நாட்டு புவியியல் அறிஞர்(ஏறத்தாள1870 ம் ஆண்டுகளுக்கு முன்) தனது வரைபடம் மூலம் தமிழர் வாழும் இடங்களென(தாமிரிகே DAMIRIKE) சுட்டிக்காட்டியுள்ளார்.(உலக வரைபடத்தை முதல் வரைந்த அறிஞர் தாலமி ஆவார். அவரின் பார்வையில் இலங்கையில் அப்போது இருந்த தமிழர் பகுதிகள் காட்டப்படுகின்றன. அதை பிறிதொரு அத்தியாயத்தில் காண்போம்) தமிழர் தாயகமான திருக்கோணமலையின் எழிலுக்கும் வளத்திற்குமாக பல பேரரசுகள் போரிட்டு மடிந்தன. இன்றைய யுத்தங்கள் கூட திருக்கோணமலையை அடிப்படையாக கொண்டு நடைபெறுகின்றதென்பது உண்மை. அதனால் தான் தமிழீழ தாயக தலைநகர் திருக்கோணமலை என என்றும் மனதில் பதித்துக்கொண்ட காவல் தெய்வங்களை இக்கணம் நினைவு கூருதல் பொருத்தமுடையதாகும். அந்த வழியிலே இலங்கையை தம்வசப்படுத்த முயன்ற மேலைத்தேய நாடுகளுடன் கண்டிய மன்னன் முரண்பட்டுக் கொண்டான். 1660 ம் ஆண்டிலே மிகப்பெரிய போர்வீரனாக இருந்த றொபேட் நொக்ஸ் என்னும் ஆங்கிலேயனை திருக்கோணமலையில் மூதூர் என அழைக்கப்படும் கொட்டியாபுரத்திலே கண்டிய மன்னன் சிறைப்பிடித்தான்.(அக்காலத்தில் கொட்டியாபுரப்பற்று வன்னிமை கண்டிய மன்னனின் மேலாட்சியை ஏற்றிருந்தது) சிறைப்பிடித்த நொக்சை கண்டிய மன்னன் 19 வருடங்கள் சிறைக்கைதியாக வைத்திருந்தான். (இன்னும் கூட மூதூரில் உள்ள பிரதான வீதிக்கு நொக்ஸ் வீதியென பெயருண்டு என்பது குறிப்பிடத்தக்கது) சிறையிலிருந்த நொக்ஸ் தருணம் கண்டு( 1710) தப்பியோடினார். தப்பியோடும் வழியில் அனுராதபுரத்தை அடைந்த அவர், அங்கு சிங்கள மொழி பேசும் ஒருவர் கூட அங்கு இல்லாததது கண்டு திகைப்படைந்துள்ளார். அங்கு ஆட்சித்தலைவராக இருந்தவர் தமிழர் என அறிந்து அவரின் உதவியுடன் அனுராதபுரத்திலிருந்து புறப்பட்டு அருவியாற்றுக்கரையோரமாக காட்டுப்பகுதியினூடாக வந்து மன்னாரை குறுக்கறுத்து வன்னிப்பெருநிலப்பரப்பினுள் வந்தடைந்தார். அக்காலத்தில் வன்னியை ஆட்சிசெய்த கைலாய வன்னியனின் ஆட்சியைக் கண்டு வியந்து நின்றார். கண்டி மன்னனுக்கோ, ஒல்லாந்தருக்கோ திறை(வரி) செலுத்தாது தன்னாட்சி கொண்ட சுதந்திர அரசை அமைத்து நேர்த்தியாக ஆண்டுவந்த கைலாய வன்னியனின் பெருமையைக் கண்டு ஆச்சரியமடைந்தார். இதுபற்றி விபரமாக தனது பயண நூலில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இலங்கைத் தீவின் படத்தையும் நொக்ஸ் வரைந்துள்ளார். அப்படத்தில் 'கைலாய வன்னியனின் நாடு' (CEYLOT WANNEA) எனக்காட்டி யாழ்ப்பாண குடா நாட்டுக்கு தெற்கே உள்ள வன்னிப்பகுதியையும், கிழக்கு கரையோரமாக உள்ள வன்னிமைகளையும் தமிழ் ஆட்சித் தலைவனாகிய கைலாய வன்னியனின் ஆட்சியின் கீழ் இருந்தமையை குறிப்பாகக் காட்டியுள்ளார். இத்தரவுகளிலிருந்து பண்டைய காலம் முதல் தமிழருக்கான தாயகம் தனியே இருந்ததென்ற உண்மையோடு ஒப்புக்கொண்டாக வேண்டி உள்ளதை உணர்தல் வேண்டும்.

ஒல்லாந்தரும் தமிழரின் ஆட்சியும்

கைலாய வன்னியன், அடங்கா அரசுரிமை கொண்டு ஒல்லாந்தரின் ஆதிக்கத்தினுள் அகப்படாமல் வீரத்துடன் ஆட்சிசெய்தான்.(இதனால் தான் அடங்காப்பற்று என பெயர் வந்ததோ?) இலங்கையிலே இனவழி நாட்டினங்கள் இரண்டு உள்ளதென ஒல்லாந்தர் ஒப்புக்கொண்டிருந்தனர். மொழி மட்டுமல்ல வாழ்வுமுறை, பண்பாடு, அரசு, ஆட்சிமுறைகளில் இருந்து இரு இனங்களும் வேறுபட்டிருந்தன. இதனை மையப்படுத்தி ஆட்சிமுறைகளையும் தத்தமது இறைமை மாறாமல் அமைத்திருந்தனர். இலங்கையின் கரையோரங்களை தளமாகக் கொண்டு ஆறு ஆட்சி மாவட்டங்களை ஒல்லாந்தர் அமைத்திருந்தனர்.(கிறிஸ்துவுக்கு முன் 161 ம் ஆண்டில் அனுராத புரத்தை தலைநகராக கொண்டு இலங்கைத்தீவு முழுவதையும் ஆட்சி செய்த எல்லாள மன்னனின் ஆட்சி அமைப்புமுறையை தழுவியே ஒல்லாந்தர் இலங்கையின் ஆட்சி அமைப்பு முறையை யாத்திருந்தனர்)

* கொழும்பு ஆட்சி மாவட்டம்

* புத்தளம் ஆட்சி மாவட்டம்.

* யாழ்ப்பாண ஆட்சிமாவட்டம்.

* திருக்கோணமலை ஆட்சி மாவட்டம்

* மட்டக்களப்பு ஆட்சி மாவட்டம்

* காலி ஆட்சி மாவட்டம்

இந்த ஆட்சி மாவட்டத்தின் தலைவர்களை கொழும்பில் இணைத்து தன்னாட்சி அதிகாரங்களை ஆளுனரூடாக வழங்கியிருந்தனர். நிர்வாகத்துடன் நீதியும் பேணுவதன் பொருட்டு மூன்று நீதி மாவட்ட பிரிவுகளாக(Judicial District) ஒல்லாந்தர் ஏற்படுத்தி இருந்தனர்.

1)கொழும்பு ஆட்சி மாவட்டம், புத்தளம் ஆட்சி மாவட்டம் இரண்டும் இணைந்து கொழும்பைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கியது.

2)யாழ்ப்பாண ஆட்சி மாவட்டமும், திருக்கோணமலை ஆட்சி மாவட்டமும், மட்டக்களப்பு ஆட்சி மாவட்டமும் இணைந்து யாழ்ப்பாணத்தைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கியது.(வடகிழக்கு இணைந்து)

3)காலி ஆட்சி மாவட்டம் தனி நீதிப்பிரிவாக காலியை தலைமையகமாகக் கொண்டு இயங்கியது.

இதிலிருந்து தமிழருக்கும் சிங்களவருக்குமாக தனித்தனி நீதிப்பிரிவுகள் அமைந்திருந்தமையை அவதானித்தல் அவசியமாகும். தனித்தனி இரு இனங்களுக்குமான வேறுபட்ட ஆட்சிமுறைகளை அமைத்து நிருவாகம் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம், திருக்கோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், கற்பிட்டி ஆட்சி மாவட்டங்களுக்கு தமிழரின் பண்பாடு, நாகரீகம், வாழ்வியல், மாறாமல் ஒன்றித்து போகக் கூடியவாறு ஆட்சி அமைக்கப்பட்டிருந்தது. ஜோஹன்சு சைமன்சு என்ற ஒல்லாந்து ஆளுநர் (கி.பி. 1703) யாழ்ப்பாண மக்களின் வழமைகள், பண்பாடுகள், மதம் என்பன தனித்துவமானது என அறிந்து அவற்றை தொகுத்து 'தேசவழமை' என பெயரிட்டு அதற்கமைய நீதி செலுத்தியமை ஒரு வரலாற்றுக் குறிப்பாகும். மேற்கூறிய வரலாற்றை மீள் நினைவுக்குட்படுத்திப் பார்க்கையில் 'தமிழருக்கான தாயகம்' இலங்கைத்தீவிலே இருந்திருக்கின்றதென்பது ஆதாரங்களுடன் உள்ளது. இதனை உற்று நோக்குகையில், தமிழருக்கான தாயகத்தைக் கோருவது என்னவோ புதிதாக முளைத்த விடயமல்ல. பரம்பரை பரம்பரையாக எம் முன்னோர்களின் முதுச சொத்தான எமது வாழ்விடங்களை தந்துவிடுங்கள் எனவும், மாற்றாருக்கு அதில் உரிமையில்லை என நீதியாகவும் நேர்மையாகவும் வெளிப்படுத்துவதே ஆகும். தமிழர் தம் தாயக பூமியில் தன்னாட்சி அமைத்து சுதந்திரமாக வாழ நினைப்பதில் தவறொன்றுமில்லை. 'தமிழர் தாயகம்' ஆக்கிரமிப்புக்குட்பட்டு பறிக்கப்படும் போது அதனை உரிமைத்துவம் கொண்ட மக்கள் தடுக்க முற்படுவதை உரிமைப்போராட்டமென்பதா? அல்லது பயங்கரவாதம் என்பதா? நேர்மையாக, நீதியாக, தர்ம அடிப்படையில் சர்வதேசம் நடுநிலமையாக இதனை நோக்கி நீதி வழங்கவேண்டும். இதையே காலம் காலமாக ஈழத்தமிழ்மக்கள் கேட்டு நிற்கிறார்கள்- மறுக்கப்படுவதனால் போரிட்டு வருகிறார்கள்.

சுவிசிலிருந்து கனகசபை தேவகடாட்சம்






அரசியல் பாகப் பிரிவினைக்குள் "தவிக்கும் தமிழகம்"

அரசியல் வாரிசுகளும் குடும்பக் கட்டுப்பாடும்: அழகிரி உணர்த்தும் காலங்கடந்த ஞானோதயம்

அரசியலில் பெரிதாக வளர நினைக்கும் தலைவர்கள், இனி மேல் அரசாங்க அதிகாரத்தில் இருந்துகொண்டு மற்றவர்களுக்குப் போதிக்கும் குடும்பக் கட்டுப்பாட்டைத் தங்கள் குடும்பத்தில் முதலில் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. மூன்று மனைவிகள், நான்கு மகன்கள், இரண்டு மகள்கள் கொண்ட தி.மு.க. தலைவர், அரசியல் பாகப் பிரிவினைக்காகப் படும் பாட்டைப் பார்க்கும்போது ஒரே ஒரு மகன் அல்லது மகள் கொண்ட அரசியல் தலைவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்பது புரிகிறது. நேருவின் குடும்பத்தைப் போல ஒரு வாரிசுக்குப் பிறகு ரிசர்வ் ஆட்டக்காரர்களாக இருக்கும் மற்றொரு வாரிசு களத்தில் இறங்கும் கட்டுப்பாடு இங்கு இல்லை. மகன், இன்னொரு மகன், மகள், பேரன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரைக் கருணாநிதி அரசியல் களத்தில் இறக்கியது, வரலாற்றைத் திரும்பிப் பார்க்கையில் பெரிய தவறாகத் தெரிகிறது. தி.மு.க/வை தோற்றுவித்தபோது தலைவர்களின் தர வரிசையில் வெகு கீழே இருந்ததாகச் சொல்லப்படும் மு.க., அதன் தலைமைப் பொறுப்பிற்கு வந்து, 13 வருட அரசியல் வனவாசத்திலும் கட்டிக் காத்த இயக்கம் இன்று சொந்த மகன்களால் சிதறும் அச்சுறுத்தல் உருவாகி உள்ளது. உண்மையில் கருணாநிதி தனது குடும்பத்திலிருந்து அரசியலுக்குக் கொண்டு வர நினைத்தது ஒரே ஒரு வாரிசைத்தான். மு.க.ஸ்டாலின் மட்டுமே அவரது 54 வருட தீவிர அரசியல் வாழ்வின் கணிசமான காலகட்டங்களில் அவரது அரசியல் வாரிசாகத் திகழ்ந்தார். மற்றவர்கள் போல் அல்லாது தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்து, அடி உதை வாங்கிய போதுகூட தீவிர அரசியலில் இருந்தவர் ஸ்டாலின். அதற்கு மாறாக, மூன்று வருடங்களுக்கு முன்பு வரை கனிமொழி வெறும் கவிஞர் மட்டுமே. அரசியல் வாய்ப்பென்ன, கருணாநிதியின் மகள் என்ற அங்கீகாரமே குடும்பத்திற்குள் கொடுக்கப்படாத காலம் ஒன்று உண்டு. அழகிரி விஷயத்திலும் வெறொரு விதத்தில் அது பொருந்தும். கட்சித் தலைவர் பதவிக்கே சவால் விடக்கூடிய அளவுக்கு அவரின் செல்வாக்கு வளர்ந்தது கடந்த இரு வருடங்களில்தான். 2000ஆம் ஆண்டில் அவர் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டார். கட்சியினர் யாரும் அவருடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என அறிவிப்பு வெளியிடப்பட்டது. 1970களில் மதுரைக்கு "விரட்டப்பட்ட" பிறகு 1990கள் வரை கருணாநிதியின் மகன் என்ற அடையாளமே இல்லாமல்தான் அவர் மதுரையில் வாழ்ந்திருக்கிறார். அவருக்குக் கட்சிக்குள் முறையான பொறுப்பு கொடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள்கூட ஆகவில்லை. தயாநிதி மாறனை கருணாநிதியின் வாரிசு என்று அல்லாமல் முரசொலி மாறனின் வாரிசு என்றே வகைப்படுத்த வேண்டியிருக்கிறது. அப்படிப் பார்க்கையில் கருணாநிதி விரும்பியது இரண்டே வாரிசுகள்தான். தனது வாரிசாக ஸ்டாலின், முரசொலி மாறன் வாரிசாக தயாநிதி. தனது மகன்கள் மீது அரசியல் காற்றுகூடப் படக்கூடாது என்று நினைத்த முரசொலி மாறன், அவர்களைத் தான் சாகும்வரை பிசினஸ்மேன்களாக மட்டுமே வைத்திருந்தார் (பிசினஸ் வளர்ச்சிக்காக அரசியல் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது வேறு கதை). முரசொலி மாறன் இறந்த பிறகு கருணாநிதிதான் தயாநிதியை அரசியலுக்கு வரவழைத்தார். தான் விரும்பி அழைத்தவர்களுக்கு மாறாக, மற்றவர்கள் நிர்ப்பந்தம் ஏற்படுத்தி உள்ளே நுழைந்தார்கள். அழகிரியைச் சுற்றி உருவான கோஷ்டியை உதாசீனப்படுத்தும் தொடர்ச்சியான முயற்சிகள் தோற்றதால் அவருக்கு ஒரு இடம் கொடுக்க வேண்டியதானது. 2000ஆம் ஆண்டில் அழகிரி கட்சியிலிருந்து நீக்கப்படுகிறார். 2001 பொதுத் தேர்தலில் தி.மு.க தோற்கிறது. அழகிரி கோஷ்டியின் ஒத்துழையாமை ஒரு சில தொகுதிகளில் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தியது என்றாலும் அதற்கும் இதற்கும் நேரடியாக முடிச்சுப் போடப்பட்டது. அதனால் கட்சி விசுவாசியும் மூத்த தலைவரும் கலைஞரின் மனசாட்சி என்று அழைக்கப்பட்டவருமான தா.கிருட்டிணன் கொலையில் அழகிரியின் ஆட்களுக்குத் தொடர்பிருக்கிறது என்ற குற்றச்சாட்டாலும் அவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கவில்லை (பிற்பாடு ஆந்திராவைச் சேர்ந்த ஒரு மாஜிஸ்திரேட் அழகிரியின் குற்றத்தை நிரூபிக்கப் போதிய ஆதாரமில்லை என்று விடுவித்தது வேறு கதை). கனிமொழி விஷயத்தில் அவரின் தாயார் ஏற்படுத்திய நிர்ப்பந்தம் பலன் கொடுத்தது. இந்த இரண்டுமே கருணாநிதியின் முதுமையில் நிகழ்ந்த, அவர் விரும்பாத மாற்றமா? அவர் திடகாத்திரமாக இருந்தபோது இவர்களுக்கு அரசியலில் இடமே கொடுக்காததைப் பார்க்கும்போது இவ்வாறு தோன்றுகிறது: ஒன்று, அவரின் முதுமையைப் பயன்படுத்திக்கொண்டு அவரை அவர்கள் தங்களுக்குச் சாதகமாக வளைத்திருக்க வேண்டும் அல்லது தனது அந்திமக் காலத்தில் தனது அரசியல் பாத்தியதையைத் தனது பிள்ளைகளுக்குப் பிரித்துக் கொடுக்க நினைத்திருக்க வேண்டும். தற்போது அழகிரி எவ்வளவோ குடைச்சலைக் கொடுத்தாலும் கருணாநிதி தொடர்ந்து ஸ்டாலின் ஆதரவு கருத்தையே கூறி வருவது அந்த முதல் கருத்தே உண்மையாக இருந்திருக்கக்கூடும் என உணர்த்துகிறது. 1957ல் முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆகிறார் கருணாநிதி. 1969ல் முதல்வராகி விடுகிறார். அதற்குப் பிறகு 2007 வரை அழகிரிக்கும் கனிமொழிக்கும் அரசியலில் எந்தப் பெரிய முக்கியத்துவமும் தரப்படவில்லை. ஆனால் அதற்குப் பிறகான குறுகிய காலத்தில் மாற்றம் வேகமாக நடக்கிறது; அழகிரியின் மகள் கயல்விழிகூட அடுத்த மாநிலங்கள் அவை எம்.பி. ஆகிவிடுவாரோ என்ற அச்சம் ஏற்படும் அளவுக்கு. இந்தியாவில் வேறு எந்த வாரிசு அரசியல் குடும்பத்திலும் இப்படிப்பட்ட காட்சியைக் காணமுடியாது. காஷ்மீரில் முஃப்தி முகமது சயீத்திற்குப் பல மகள்கள் இருந்தாலும் ஒரே ஒரு மகள் மட்டுமே அரசியலுக்கு வந்திருக்கிறார். பால் தாக்கரேவுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் இருந்தாலும் உத்தவ் தாக்கரே மட்டுமே தீவிர அரசியலில் இருக்கிறார். லாலூ தான் இல்லாத இடத்தில்தான் ராப்ரியை அமர்த்தினார். பிறகு மீண்டும் அடுப்படிக்கே திருப்பி அனுப்பினார். தனது மனைவியின் தம்பி சாது யாதவ் இப்போது அழகிரி செய்வது போல பிரச்சினை கொடுத்தபோது, வாலை ஒட்ட நறுக்கினார் (அய்யா காங்கிரசுக்குத் தாவி தேர்தலில் மண்ணைக் கவ்வினார்). அப்போது லாலூ சொன்ன கருத்து சுவாரசியமானது: "நான்தான் இங்கு மின்சார உற்பத்தி மையம். அவன் வெறும் டிரான்ஸ்பார்மர். நான் powerஐ நிறுத்தினால், அவன் powerless ஆகிவிடுவான்." கருணாநிதி மனது வைத்தாலும் அழகிரிக்கு அதே கதி நேரக்கூடும். ஆனால் கடந்த பத்தாண்டுகளில் அவர் கொடுத்த இடத்தால் அழகிரி தனது கோஷ்டியை சற்று வலுப்படுத்திக் கொண்டுவிட்டதால் ஆணிவேரோடு பிடுங்க கூடுதல் மனஉறுதி தேவை. தனது அத்தனை பிரச்னைகளிலிருந்தும் மீட்சி கிடைப்பதற்கு ஜெயலலிதா நம்பியிருப்பது அழகிரியைத்தான். தனது கட்சி உயராவிட்டால்கூட எதிரிக் கட்சி தாழ்ந்துவிட்டால், வெற்றிக்கு அது போதாதா? அதனால் அ.தி.மு.க. வரலாற்றில் நிகழ்ந்திராத வகையில் பென்னாகரம் இடைத்தேர்தலில் வைப்புத் தொகையை இழந்தது குறித்த வேதனையைவிட, அதே தருணத்தில் தி.மு.க.வில் அழகிரி தயவில் நடந்த குழப்பத்தால் அவர் அதிக மகிழ்ச்சி அடைந்திருக்கக்கூடும். எல்லா பெரிய சாம்ராஜ்யங்களிலும் வீழ்ச்சிக்கான ஆரம்பம் உள்ளுக்குள்ளிருந்தே தொடங்கியிருக்கிறது. காமராஜரால், எம்.ஜி.ஆரால், வைகோவால், ஜெயலலிதாவால் சாதிக்க முடியாததை அழகிரி மிக சுலபமாக சாதித்துவிடுவார் போலிருக்கிறது.






வெடிக்காத குண்டுகளுடன் புறப்பட்ட வான் புலிகள்: அதிர்ச்சித் தக‌வ‌ல்


இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கின்றது என்பதை சிந்திக்க முதலில், நாம் ஒரு விடையத்தை முதலில் கவனிக்கவேண்டும். அன்றைய தினம் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் எக் குண்டுகளும் வெடிக்கவில்லை என்பதேயாகும். இதனிடையே குண்டுகளைத் தான் வீச முடியவில்லை, தான் கட்டிடம் ஒன்றில் மோதினால் அக்குண்டுகள் வெடிக்கும் என நினைத்த விமானி அருகில் இருந்த வருமான வரி திணைக்களக் கட்டிடத்தின் மேல் மோதியுள்ளார். இருப்பினும் அக் குண்டுகள் வெடிக்கவில்லை. அதனால் விமானம் கட்டிடத்துடன் மோதும் போது ஏற்பட்ட தீ விபத்தைத் தவிர வேறு எந்த வெடிப்புகளும் அங்கு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வழமையாக புலிகளின் தாக்குதல் விமானம் ஒன்று 4 குண்டுகளை சுமந்து செல்ல வல்லது. அவை ஒவ்வொன்றும் சுமார் 25KG எடையுள்ளவை. அவற்றில் ஒன்று வெடித்திருந்தாலே, கட்டிடத்திற்கு கணிசமான சேதம் உண்டாகியிருக்கும். விமானத்தில் சுமார் 200KG வெடிபொருட்கள் இருந்திருக்கிறது, அவை வெடித்திருந்தால், வருமான வரி திணைக்கள அலுவலகம் முற்றாக இடிந்திருக்கும். ஆனால் கட்டிடத்தில் பெரும் தீ மூண்டதே அன்றி ஒரு பாரிய வெடிப்பு எதுவும் நிகழவில்லை என்பது உண்மையாகும். அதே போல கட்டுநாயக்க விமான நிலையத் தாக்குதலிலும் போடப்பட்ட குண்டுகள் வெடிக்கவில்லை என இராணுவம் கூறியுள்ளது. அக் குண்டுகள் வெடித்திருந்தால் விமான எதிர்ப்பு நிலையம் சேதமடைந்திருக்கும். பின்னர் விமானத்தை சுட்டு வீழ்த்த முடியாத நிலை தோன்றியிருக்கும்.அதாவது பல காட்டிக் கொடுப்புகளாலும் துரோகங்களாலும், எமது போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்திருக்கிறது. தற்போது அவை மெல்ல மெல்ல வெளிவந்தவண்ணம் உள்ளன. இத் தகவல்களை நாம் பரபரப்புக்காக பிரசுரிக்கவில்லை. மாறாக என்ன நடந்தேறியுள்ளது என மக்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறோம்! இனி இவ்வாறான நிகழ்வுகள் எமது சமூகத்தில் நடப்பதை தடுக்க விரும்புகிறோம். அரசியல் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள எம்மை இதுபோல எதிரி ஆழ ஊடுருவி அளிக்கக்கூடும், யாரையும் தரக்குறைவாக எடைபோடாமல், எம்மில் ஊடுருவியுள்ள சிங்கள சக்திகளை இனம் கண்டு, அவர்களைக் களைந்து நாம் எமது போராட்டத்தில் வெற்றிபெறவேண்டும், இது ஒரு தோல்வியல்ல, இது எமக்கு ஒரு பாடம், இந்த தடைக்கல்லை நாம் படிக்கல்லாக மாற்றவேண்டும்.முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய பல துரோகச் செயல்கள் குலை நடுங்கவைக்கும் சம்பவங்களாக இருக்கின்றன. இதை நாம் திரும்பத் திரும்ப ஏன் பேசவேண்டும் எனச் சிலர் எண்ணுவர். இது குறித்து நாம் அறிந்துவைத்திருப்பது நல்லது. நடந்து முடிந்த சில சம்பவங்கள் எமக்கு சிறந்த வழிகாட்டியாக அமையும். நடந்தேறிய துரோகங்கள் அனைத்தையும் அறிந்து தெளிவுபெறவேண்டும், எதிரி எவ்வடிவில் வந்தாலும், நாம் தற்போது அறிந்தவை, எமது கடந்த கால அனுபவங்களை பயன்படுத்தி எமது போராட்டத்தில் நாம் வெற்றிவாகை சூடவேண்டும்.







Thursday, April 15, 2010

த‌லைநிமிர்வு : த‌லைவ‌னும் த‌மிழீழ போராட்ட‌மும்..பாக‌ம் 05. . . .காணொளி

இத‌ன் தொட‌ர்ச்சி ஒவ்வொரு வார‌மும் பிர‌சுரிக்க‌ப்ப‌டும் என்ப‌தை எம‌து வாச‌க‌ர்க‌ளுக்கு தெரிவித்துக்கொள்கின்றோம்.






பற்குணம் – இரண்டாவது உட்படுகொலை – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஐயர் : பகுதி 05

சில மாதங்கள் இடைவெளியில் இருவேறு தாக்குதல் வெற்றிகரமாக நடத்தப்பட்டுவிட்டன. இவையெல்லாம் எமது இரத்ததில் புதிய நம்பிக்கை அணுக்களை உருவாக்கியிருந்தது. அனைவருக்கும் அதீத உற்சாகம் பொங்கியது. தமிழீழம் மிக அண்மையில் எட்டிவிடும் தூரத்திலேயே இருப்பதாக உணர்கிறோம்.
தனிமனிதப் படுகொலைகள் என்றாலும் உணர்ச்சியின் உந்துதலுக்கு உட்படுத்தப்பட்ட எமக்கெல்லாம் அவை தாக்குதல்கள் தான். மக்கள் போராட்டங்கள் பற்றியும் அதற்கான அரசியல் வழிமுறை பற்றியும் அறிந்து வைத்துக்கொண்டா இவற்றைத் திட்டமிட்டோம்.
எமது தோளில் புதிய சுமையை உணர்கிறோம். பற்குணமும் இணைந்துகொள்ள விரிவாக்கப்பட்ட மத்திய குழு ஒன்று கூடல்களை பல தடவை நிகழ்த்துகிறோம். ஒரு புறத்தில் உற்சாகத்தில் மக்கள் மக்கள் திளைத்திருக்க மறுபுறத்தில் நாமும் எமது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தல் குறித்து ஆராய்ந்து கொண்டிருந்தோம்.
பற்குணம் இந்தியாவில் வாழந்த வருடங்களில் ஈழப் புரட்சி அமைப்பு என்ற ஈரோஸ் (EROS) உடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தார். அருளர் என்ற அருட்பிரகாசத்துடன் ஏற்பட்ட தொடர்புகளூடாக அரசியல் விடயங்களில் அக்கறை உடையவராகவும் அதே வேளை ஈரோஸ் அமைப்பின் அனுதாபியாகவும் கூட மாற்றமடைந்திருந்தார்.
எமது மத்திய குழுக் கூட்டங்களில் பிரபாகரனுக்கும் பற்குணத்திற்கும் முரண்பாடுகள் ஏற்படுகின்றன. பிரபாகரனிற்கு அரசியல் விடயங்களில் அக்கறை இல்லை, எமக்கு என்று அரசியல் நிலைப்பாடும் அரசியல் வழிநடத்தலும் தேவை என்ற கருத்தைப் பற்குணம் முன்வைக்கிறார். பிரபாகரனைப் பொறுத்தவரை பலமான ஒரு இராணுவக் குழு தேவை என்பதே பிரதான நோக்கமாக இருந்தது. இந்த விவாதங்கள் எல்லாம் ஒரு குறித்த காலத்தின் பின்பாக, குறிப்பாக மத்திய குழு விவாதங்களின் போது பிரபாகரனுக்கும் பற்குணத்திற்கும் இடையிலான முரண்பாடாக எழுகிறது. பிரபாகரன் அரசியலற்ற வெறும் இராணுவச் சிப்பாய் போலச் செயற்படுவதாகவும் , ஒரு விடுதலை இயக்கத்தை வழி நடத்தத் தகமையற்றவர் என்ற கருத்தையும் கூட்டங்களில் முன்வைக்கிறார். இதற்குப் பிரபாகரனிடம் பதில் இருக்கவில்லை.
அதே வேளை பற்குணம் புகைப்பிடிகும் பழக்கததைத் தவிர சந்தர்ப்பங்களில் மதுபானம் அருந்தும் பழக்கததையும் கொண்டிருந்தார். தவிர, இந்தியாவிலிருந்து திரும்பியதும் இந்தியாவில் பெண்களுடன் தொடர்புகள் கொண்டிருந்ததாகவும் எமக்கெல்லாம் கூறினார். மத்திய குழுக் கூட்டங்களில் பிரபாகரன் இது குறித்து விவாதங்களை முன்வைக்காவிட்டாலும், அதற்கு வெளியில் எம்மைத் தனித்தனியாகச் சந்திது, பலதடவைகள் பற்குணத்தின் இயல்புகள் குறித்து எம்மிடம் குறைகூறுவது வழமை. பற்குணம் ஒழுக்கமற்றவர் என்பதைப் பிரபாகரன் எம்மிடம் கூறுவார்.
பிரபாகரனைப் பொறுத்தவரை தேனிர், கோப்பி போன்றவற்றை கூட அருந்தாத தூய ஒழுக்கவாதியாகவே காணப்பட்டார். அவரைப் பின்பற்றிய எம்மில் பலர் இந்த ஒழுக்கவாதத்தை கடைப்பிடித்திருந்தனர்.
பிரபாகரன் மீதிருந்த தனிமனிதப்பற்று என்பது பற்குணம் கூறுவதை ஏற்கத் தடையாக இருந்தது. பிரபாகரனுக்கும் பற்குணத்திற்கும் இடையில் நிகழும் விவாதத்தில் நாமெல்லாம் மௌனம் சாதித்தாலும் பிரபாகரனை இந்தியாவிலிருந்து திடீரென வந்த பற்குணம் குறைகூறுவது எமக்கெல்லாம் நியாயமாகப்படவில்லை.
பற்குணத்தின் ஊடாக மன்னார் வீதியில் அமைந்திருந்த கன்னாட்டி என்னும் இடத்தில் ஈரோஸ் அமைப்பினர் ஒரு பண்ணை ஒன்றை நடத்திவருவதாக அறிந்தோம். எம்மைப் போலவே சில புதிய உறுப்பினர்களைப் பயிற்றுவிக்கும் இடைநிலை முகாமாகவிருந்த கன்னாட்டிப் பண்ணையிலிருந்த ஈரோஸ் உறுப்பினர்களுடன் எமக்குத் தொடர்புகள் ஏற்படுகிறது. அவ்வேளையில் சங்கர் ராஜி, அருளர்,அந்தோனி என்ற அழகிரி போன்ற ஈரோசின் முக்கிய உறுப்பினர்கள் அங்கு தங்கியிருந்தனர். பலஸ்தீன விடுதலை இயக்கத்துடன் தொடர்புகளைக் கொண்டிருந்த இவர்களில் சில உறுப்பினர்கள் அவர்களிடம் பயிற்சியையும் பெற்றிருந்தனர்.
சில நாட்களுக்கு உள்ளாகவே எமது பூந்தோட்டம் முகாமிற்கு அவர்கள் வருவதும், நாங்கள் அவர்களது முகாமிற்குச் செல்வதுமாக ஒரு நட்ப்பு வளர்ந்திருந்தது. பற்குணம் இது குறித்து மகிழ்ச்சியடைந்திருந்தாலும், எமது இயக்கத்திற்கும் அரசியல் நடைமுறைகள் தேவை என்பதையும், அரசியலற்ற பிரபாகரன் தலைமைக்குத் தகுதியற்றவர் என்பதையும் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்தார்.
ஈரோஸ் இயக்கத்தினர் எமது பூந்தோட்டம் பண்ணைக்கு வந்து எம்மோடு உரையாடல்களை நடத்துவார்கள். பெரும்பாலும் இராணுவ நடவடிக்கைகள், தாக்குதல்கள், பயிற்சி, துப்பாக்கி சுடுதல் போன்ற விடயங்களை நாங்கள் பேசிக்கொள்வோம். 1977 பொதுத் தேர்தலுக்குச் சில காலங்களின் முன்னர் சங்கர் ராஜி என்ற பலஸ்தீன விடுதலை இயக்கத்தில் பயிற்சி பெற்ற ஈரோஸ் உறுப்பினர் எமது முகாமிற்கு வந்திருந்த போது ஒரு சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்தது. பிரபாகரனோடு சங்கர் ராஜி, பலஸ்தீன விடுதலை இயக்கம் பயிற்சிகள் குறித்துப் பேசிக்கொண்டிருந்தனர். அரசியல் விவகாரங்களில் பிரபாகரன் ஆர்வம் காட்டவில்லை. எமக்கு அருகே இருந்த சிறிய இலக்கு ஒன்றை குறிவைத்துச் சுடுமாறு சங்கர் ராஜியிடம் பிரபாகரன் கேட்க, அவரும் அவ்வாறே சுடுகிறார். குறி தவறி வேறு இடத்தில் சூடு படுகிறது. துப்பாக்கியை வாங்கிக்கொண்ட பிரபாகரன் அதே இலக்கைக் குறிவைத்துச் சுடுகிறார். குறி தப்பவில்லை. இலக்கில் நேரடியாகச் சென்று குண்டு துளைத்ததும், ஈரோஸ் இயக்கதிலிருந்து எமது பண்ணைக்கு வந்த அனைத்து விருந்தினர்களும் ஆச்சர்யப்பட்டுப் போகிறார்கள்.
வங்கிக் கொள்ளை நிகழ்த்தியிருந்த நாம் ஒப்பீட்டளவில் ஈரோஸ் இயக்கத்தை விட வசதி வளங்களைக் கொண்டவர்களாக இருந்தோம். பற்குணதின் சிபார்சின் பேரில் ஈரோஸ் அமைப்பிற்குப் பண உதவி செய்வதென்ற கருத்தை எமது மத்திய குழுவைக் கூட்டி விவாதிக்கிறோம். இறுதியில் பிரபாகரனும் அவர்கள் நட்பு சக்திகள் என்ற அடிப்படையில் ஒரு குறித்த பணத் தொகையை வழங்க வேண்டும் என்று முன்மொழிய நாங்களும் அதை ஒத்துக்கொள்கிறோம். இந்த முடிவின் அடிப்படையில் ஈரோஸ் அமைப்பிற்கு 50 ஆயிரம் ரூபா வரையிலான பணம் வழங்கப்படுகிறது. பிரபாகரனுக்கோ எமக்கோ இலங்கை அரசிற்கு எதிரான இன்னொரு இயக்கம் வளர்வதில் எந்த பய உணர்வோ, காழ்ப்புணர்வோ அன்றைய சூழலில் இருந்ததில்லை.
பேபி சுப்பிரமணியம் , தங்கா போன்றவர்களூடாக, தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த அமிர்தலிங்கம், மாவை சேனானதிராஜா போன்றவர்களுன் இறுக்கமான தொடர்புகள் ஏற்படுகின்றன. சேனாதிராஜா தான் முதலில் எமக்குக் ஏற்பட்ட கூட்டணியின் முதல் நம்பிக்கையான தொடர்பு. அவரினுடாக அமிர்தலிங்கத்தின் தொடர்பு ஏற்படுகிறது. சேனாதிராஜா வீட்டிற்கும், அமிர்தலிங்கத்தின் வீட்டிற்கும் பிரபாகரன் வேறு உறுப்பினர்களோடும் தனியாகவும் செல்வது வழமையாகிவிட்டது. தவிர, மத்திய குழு சார்பிலான சந்திப்புக்கள் நடைபெறவில்லை. பின்னதாக நான் இலங்கைக்குத் திரும்பிச் சென்றதும், மத்திய குழுவுடனான சந்திப்பு ஒன்று நிகழ்கிறது. அந்த சந்தர்ப்பத்தில் நானும் அமிர்தலிங்கம் வீட்டிற்குச் சென்றேன் என்பது எனது நினைவுகளில் பதிந்துள்ளது.இவ்வாறான எந்தச் சந்திப்புக்களிலும் பற்குணம் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வேளைகளில், புதிதாக உருவான தமிழர் விடுதலைக் கூட்டணியுடனான அரசியல் தொடர்புகளையும் பற்குணம் கடுமையாக விமர்சிக்கிறார். கூட்டணியின் அரசியல் என்பது சந்தர்ப்பவாத அரசியல் என்றும் அதனால் நாங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் பற்குணம் விமர்சிக்கிறார். இந்த வேளைகளிலெல்லாம் எனக்குப் பிரபாகரன் சொல்வது தான் நியாயமாகத் தென்பட்டது. ஒருபக்கத்தில் அரச படைகள் மறுபக்கத்தில் தமிழர்கள் இதற்கு மேல் என்ன அரசியல் என்பது தான் பொதுவான மனோபாவமாக என்னிடமும் காணப்பட்டது. மத்திய குழுவின் அனைத்து உறுப்பினர்களும் பிரபாகரன் பக்கம்தான்.
பிரபாகரனுக்கும் பற்குணத்திற்கும் இடையேயான சச்சரவின் நடுவே நாங்கள் மௌனிகளாகவே இருந்தோம்.
ஈரோஸ் இயக்கம் தம்மை அரசியல் ஆளுமை மிக்கவர்களாக கருதிக்கொண்டிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளோ அரசியல் என்பதெல்லாம் தேவையற்றதாகவே கருதியிருந்தது. இந்தச் சூழலில் ஈரோஸ் என்ற அரசியல் இயக்கம் தமது இராணுவப் படையாகத் தமிழீழ விடுத்லைப் புலிகளை இணைத்துக் கொள்வதற்காக முயற்சி செய்து வந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அதாவது ஈரோஸ் அரசியல் தலைமை வழங்க நாமெல்லாம் அவர்களின் இராணுவக் குழுவாகச் செயற்படுவோம் என்று எதிர்பார்த்தார்கள். தம்பி பிரபாகரனும், நாமும் பற்குணத்தின் ஊடாக அவர்களின் நோக்கத்தை நிறைவேற்ற எத்தனிப்பதாகக் கருதினோம். பற்குணமும் பல தடவைகள் அவரது விவாதங்களூடாக இதனைத் தெரிவித்திருந்தார். பிரபாகரனைக் குற்றம்சாட்டும் கருப்பொருளாக இதுவே அமைந்திருந்தது.
தொடர்ச்சியான விவாதங்களின் பின்னர் பற்குணம் ஒரு கருத்தை முன்வைக்கிறார். அவர் தனியே பிரிந்து சென்று புதிய அமைப்பாக இயங்க விரும்புவதாகவும் அதற்காக 25 ரூபா பணமும் ஒரு கைத்துப்பாக்கியும் வழங்குமாறு கோருகிறார். இந்தக் கோரிக்கை வியப்பாக இல்லாவிட்டாலும் அதிர்ச்சி தருவதாக அமைந்தது என்னவோ உண்மைதான்.
பற்குணம் இந்தக் கோரிக்கையை மத்தியகுழுவில் தான் முன்வைக்கிறார். அப்போது பிரபாகரன் ஏதும் பேசவில்லை. மத்திய குழுக் கூட்டம் முடிவடைந்ததும் பிரபாகரன் எம்மைத் தனித் தனியே சந்திக்கிறார். அப்போது, இயக்கத்திலிருந்து விலகிச் சென்று புதிய இயக்கம் உருவாக்கினால் மரண தண்டனை என்பதை பற்குணம் மறந்துவிட்டுப் பேசுகிறார் என்றும், இவருக்கு மரண தண்டனை தான் தீர்வு என்றும் எல்லோரிடமும் கூறுகிறார்.
இந்த விடையம் பற்குணத்திற்குத் தெரியாது. அவர் தவிர்ந்த, நான் உள்பட்ட அனைத்து மத்திய குழு உறுப்பினர்களும்ன் அவர் கூறுயதை ஆமோதிக்கிறார்கள். நாம் ஒரு இராணுவக் குழு; அதற்கு இராணுவக் கட்டுப்பாடுகள் உண்டு; மீறினால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்; இயக்கம் முழுவதுமே அழிக்கப்பட்டுவிடும் என்ற கருத்துக்கள் தான் மேலோங்குகிறது. இப்போது நாம் அனைவருமே பற்குணத்தின் மரண தண்டனையை ஏற்றுக்கொள்கிறோம். அவர் கொல்லப்பட வேண்டியவர் தான் என்பது எம்மளவில் முடிபாகிவிட்டது.
இதனிடையே ஜெயவேல் என்பவர் கைது பொலீசாரின் வலைக்குள் சிக்கிவிடுகிறார். எம்மிடம் வாங்கிய பணத்தை வைத்து ஆடம்பரச் செலவுகள் செய்துவந்ததால் சந்தேகத்தின் பேரில் ஜெயவேல் முதலில் கைதுசெய்யப்படுகிறார். குளிப் பானதினுள் நஞ்சு வைத்துக் கொலைசெய்ய முற்பட போது தப்பித்துக்கொண்ட ஜெயவேல் இப்போது பொலீசாரின் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார். விசாரணைகளின் கோரத்தில் அவர் என்னையும் ராகவனையும் காட்டிக்கொடுத்து விடுகிறார்.
இதன் பின்னர் நான் தேடப்படுகிறவன் ஆகிவிடுகிறேன். எனது வீட்டைப் பொலீசார் சோதனையிடுகின்றனர்.புன்னாலைக்கட்டுவனில் எனது வீட்டைச் சுற்றிவளைத்த பொலிசார், வீட்டைச் சல்லடை போட்டுத் தேடுகின்றனர். எனது பெற்றோரை மிரட்டி என்னைப்பற்றிய தகவல்களைக் கேட்கின்றனர். புத்தூர் வங்கிக் கொள்ளைக்கான திட்டமிடல் நடவடிக்கைகளை எனது வீட்டிலிருந்தே மேற்கொண்டோம்.
ஜெயவேல் ஊடாக இதனை அறிந்துகொண்ட காவற்துறைக்கு இந்த வழக்கில் நான் முக்கிய எதிரியாகிவிடுகிறேன். புன்னைலைக்கட்டுவனில் பல பகுதிகளிலும் எனது நடம்மாட்டம் தொடர்பான தகவல்களைத் திரட்டுகிறார்கள். இந்த அவசர நிலையைக் கருத்தில்கொண்டு ராகவன், பட்டண்ணா ஆகியோரை இந்தியாவிற்குச் செல்லுமாறு பிரபாகரன் கூறுகிறார். ராகவன் பட்டண்ணா ஆகியோர் புலிகளில் ஆதரவாளர்களாக இருப்பினும் ஜெயவேலுக்கு இவர்களின் தொடர்புகள் இருப்பிடங்கள் என்பன தெரிந்திருந்தது. இதனால் இவர்களுக்கு ஆபத்து நேரலாம் என்பதால் பிரபாகரனே இவர்களையும் கூட்டிச் செல்லுமாறு கோருகிறார் தங்கத்துரை யின் கடத்தல் படகு ஒன்ன்றில் மன்னார் சென்று மன்னாரிலிருந்து ராமேஸ்வரம் செல்கிறோம்.
நான் நேசித்த தாய் மண்ணைப் பிரிந்த சோகத்தின் மத்தியில் இந்திய மண்ணிலிருந்த நம்பிக்கை அதன் மீதான மதிப்பாகவும் மாறியது. வெறும் உணர்ச்சிச் சமன்பாடுகள் தான் எமது சிந்தனையைத் தீர்மானிக்கும் வரம்புகளாகியிருந்த காலகட்டத்தில் இதைவிட வேறு எதையெல்லாம் எதிர்பார்க்க முடியும்?
அங்கிருந்து சேலத்திற்குச் செல்கிறோம். அங்கே பெரிய சோதி, சின்னச் சோதி என்றி அழைக்கப்படும் வல்வெட்டித்துறையச் சேர்ந்த இருவருடன் நாம் தங்கியிருந்தோம். இவர்கள் தங்கத்துரை குட்டிமணியின் கடத்தல் குழுவைச் சார்ந்தவர்கள். எமக்கு வேறு உழைப்போ பணவசதியோ இல்லாத நிலையில் இவர்கள் தான் எம்மைப் பாதுகாக்கிறார்கள். உணவருந்துதுவதும், உறங்குவதும், தமிழ் சினிமாப் பார்ப்பதும் தான் எமது வேலையாக இருந்தது. சுமார் நான்கு மாதங்கள் வரை சேலத்திலேயே எமது நாட்களைக் நகர்த்துகிறோம்.
உலகம் முழுவதும் எவ்வாறு போராட்டங்கள் முன்னோக்கிச் செல்கின்றன, முற்போக்கு சக்திகளுடனான உறவு, ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல்கொடுத்து அவர்களோடு கைகோர்த்துக் கொண்டு எமது தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தைப் பலப்படுத்தல் போன்ற எந்த விடயங்களைப் பற்றிய எந்த சிந்தனையும் எமக்கு இருந்ததில்லை. பிற்காலப்பகுதியில், புலிகளுடனான நீண்ட நாட்கள் கடந்துபோன பின்னர், அவற்றை எல்லாம் தெரிந்து கொண்ட போது தான் நமது தவறுகள் குறித்தும், புதிய அரசியல் திசைவழி குறுத்தும் சிந்திக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.
அப்போதெல்லம் குறைந்த பட்சம் போராட்டங்கள் குறித்தும், அரசியல் குறித்தும், மார்க்சியம் குறித்தும் ஆயிரம் விடயங்களைப் படித்துத் தெரிந்துகொண்டாவது இருக்கலாம் என்று இப்போது வருந்துவதுண்டு. எமது குறுகிய உலகத்துள் எமக்குத் தெரிந்ததெல்லாம் தாக்குதலும் எதிர்த் தாக்குதலும் என்பது மட்டும்தான்.
இதனிடையே தாயகத்தில் பற்குணம் கொல்லப்படுவதற்கான முடிபு உறுதிப்படுத்தப்படுகிறது.
அவ்வேளையில் பற்குணம் கொழும்பிற்கு செல்கிறார். கொழும்பில் வேலை பார்த்துக்கொண்டிருந்த எமது மத்திய குழு உறுப்பினரான நாகராஜா(வாத்தி), பற்குணத்தை புளியங்குழம் முகாமிற்கு அழைத்து வருகிறார். அங்கு இரவிரவாக பற்குணத்துடன் பிரபாகரன் மற்றும் மத்திய குழு உறுப்பினர்கள் நண்பர்களாகப் பேசிக் கொண்டிருக்கின்றனர். நள்ளிரவிற்குச் சற்றே பிந்திய வேளையில் பற்குணத்தோடு உரையாடிக் கொண்டு இருக்கையிலேயே அவரைத் தனது கைத்துப்பாக்கியால் பிரபாகரன் கொலைசெய்துவிடுகிறார். அவ்வேளையில் பேபி, தங்கா, நாகராஜா, குலம் போன்றோர் அங்கிருக்கின்றனர். பற்குணம் இறந்து போகிறார்.
துரையப்பா கொலைச் சம்பவத்திற்கான செலவுகளுக்காக தனது தங்கையின் நகைகளை அடகுபிடித்து பணம்கொடுத்த பற்குணத்தையே கொலைசெய்ய வேண்டியதாகிவிட்டது என்று பிரபாகரன் பின்னரும் பல தடவைகள் கூறி வருந்தியிருக்கிறார்.
இந்தச் சம்பவம் நிகழ்ந்த போது நான் சேலத்திலேயே இருந்ததால் இது எனக்கு உடனடியாகத் தெரியாது.
நாங்கள் இந்தியாவில் தங்கியிருக்கும் வேளையில் ஐக்கிய தேசியக் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருகிறது. மறுபுறத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி பெரும் வெற்றியீட்டுகிறது. 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி பெற்ற அங்கீகாரமாக இத் தேர்தலின் வெற்றி கருதப்பட்டது. 1977 ஜூலை 21ம் பெரும்பாலும் எல்லாத் தமிழ் பேசும் மக்கள் வாழும் மாவட்டங்களும் பிரிவினைக்கான சுலோகத்தை முன்வைத்துப் போட்டியிட்ட கூட்டணிக்கு வாக்களிக்கின்றனர்.
இதே வேளையில் பிரதம மந்திரியாக வெற்றியீட்டிய ஜூனியஸ் ரிச்சார்ட் ஜெயவர்த்தன, யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த பொலீசாருக்கு எதிரான கொலைச் சம்பவங்களுக்குப் பொறுப்பான குழுக்களுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் நேரடியான தொடர்புகள் இருப்பதாகவும், இந்த இரு பகுதியினருமே அழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறார்.
இதே வேளை வன்முறையாக நான்கு பொலீசார் யாழ்ப்பாணத்தில் நடந்த கானிவேல் ஒன்றினுள் அனுமதிசீட்டு இல்லாமல் பிரவேசிக்க முயன்ற போது உருவான தர்க்கத்தில் மக்களால் தாக்கப்படுகிறார்கள். இதனைத் தொடர்ந்து உருவான தமிழ் சிங்கள மோதல், இன வன்முறையாக மாற்றம் பெறுகிறது. 12ம் திகதி ஆகஸ்ட் 1977 ஆம் ஆண்டு ஆரம்பமான இவ்வன்முறைகள், அரசின் மறுதலையான ஆதரவுடன், இனப்படுகொலை வடிவத்தை கொள்கிறது.300 தமிழர்கள் சிங்களக் காடையர்களால் கொல்லப்படுகிறார்கள். தமிழர்களுக்கு உரிமை தருவதாகப் பேசி ஆட்சிக்கு வந்திருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன, தமிழர்களதும் தமிழர் விடுதலைக் கூட்டணியினதும் பிரிவினைக் வாதத்தில் ஆத்திரமடைந்த சிங்கள மக்களின் எழுச்சியே இவ் வன்முறைகள் என்று வெளிப்படையாகவே கூறுகிறார். இந்தி யாவிலிருந்து இதை அறிந்த நாம் வெறுப்பும் கோபமும் அடைகிறோம்.
30 நாட்கள் நீடித்த இந்த வன்முறைகளின் சில நாட்களில் பிரபாகரன், மாவை சேனாதிராஜா, காசியானந்தன் ஆகியோர் தங்கத்துரை குட்டிமணியின் கடத்தல் படகு மூலமாக இந்தியாவிற்கு வருகின்றனர்.
பேபி சுப்பிரமணியம், தங்கா போன்றோர் ஊடாக நான் இந்தியாவிலி இருக்கும் வேளையில் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் புலிகளின் தொடர்பு வலுப்பெற்று வளர்ச்சியடைகிறது. பற்குணத்தின் மறைவிற்குப் பின்னர் புலிகளின் மத்திய குழுவுடனான தமிழர் விடுதலைக் கூட்டணியின் தொடர்புகள் வலுப்பெறுகின்றன. தேர்தல் வன்முறைகள், ஜெயவர்தன அரசு வெளிப்படையாகவே கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகள் என்பவற்றின் தொடர்ச்சியாக இச்சந்திப்புக்கள் மேலும் கூட்டணியுடனான இறுக்கத்தை வலுவாக்குகின்றன. பிரபாகரன் நான் இருந்த சேலத்திற்கு வருகிறார். இதே வேளை பேபி சுப்பிரமணியம் விமான மூலமாக இந்தியாவிற்கு வருகிறார்.
நான் இந்தியாவில் இருந்த வேளையில் எமது மத்தியிகுழுவும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஒரு எழுதப்படாத உடன்பாட்டிற்கு வருகின்றனர். தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியல் அமைப்பு என்றும், இளைஞர் பேரவை வெகுஜன அமைப்பு என்றும், புலிகள் இவற்றிற்கான இராணுவ அமைப்பு என்றும் முடிபிற்கு வருகின்றனர்.
தேர்தல் வெற்றியும், தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முரைகளும், அவற்றிற்கு எதிரான தமிழர் விடுதலைக் கூட்டணியின் வீராவேசப் பேச்சுக்களும் புலிகள் இந்த முடிபிற்கு வரக் காரணமாக அமைந்தது. இது தொடர்பாக தம்பி இந்தியா வந்ததும் என்னிடம் கூறுகிறார். நானும் அவற்றை எந்த மறுப்பும் இன்றி ஏற்றுக்கொள்கிறேன்.
தமிழ் நாட்டில் இருந்த காலப்பகுதியில் மதுரையில் நடராசா என்ற ஓவிரைப் பிரபாகரன் சந்திக்கிறார். அவர் தான் விடுதலைப் புலிகள் சின்னத்தை வரைந்து கொடுக்கிறார்.
சேனாதிராஜா, காசியானந்தன, பிரபாகரன் மூவரும் கலைஞர் கருணாநிதியை மரீனா பீச்சில் சந்திக்கிறார்கள். அச்சந்திப்பிற்கு சந்தர்ப்பவசமாக நான் செல்லவில்லை ஆனால் என்னோடு தங்கியிருந்த பட்டண்ணா சென்றார் என்பது நினைவிற்கு வருகிறது. இச் சந்திப்பிற்கான ஏற்பாட்டை சேனாதிராஜா தான் ஒழுங்குபடுத்தியிருக்க வேண்டும்.
இவ்வேளையில் இலங்கையில் எமது வழமையான இயக்க வேலைகள் முடங்கிப் போய்விடக் கூடாது என்பதற்காக நான் இலங்கைக்குப் போவதாக முடிவெடுக்கப்படுகிறது. சின்னச் சோதி நான் திரும்பிச் செல்வதற்கான படகை ஒழுங்கு செய்கிறார். மயிலிட்டிக்குப் படகு வந்து சேர்கிறது. மறுபடி சொந்த மண்ணில் கால்பதித்த உணர்வு மேலிடுகிறது!






பிள்ளையைக் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும்:

பொறுமையின் எல்லையைக் கடந்து விட்டது தமிழ் நெற் ஆசிரிய குழுமத்தின் வன்மமும் வக்கிரமும்.
ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் சிறந்த சமூகமொன்றிற்கான அடிப்படைத் தேவையாகும். துருவ மயப்படுத்தப்பட்ட சிந்தனைக்கு ஊடாக இதுவரை கட்டி வளர்க்கப்பட்ட தமிழ்ச் சமூகம் மேற்குலகிற்கு இடம்பெயரத் தொடங்கியதும் புதிய விடயங்களைக் காணத் தொடங்கியது. ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட எதிர்பாராத திருப்பங்கள் தமிழ் மக்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலம் அமைய வேண்டிப் பாடுபட்டோரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக மேலும் மோசமான குழப்ப நிலை உருவாகியுள்ளது. ஒரு சிறந்த தீர்மானத்தை எட்டுவதற்காக அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க முன்வர வேண்டும் என்ற என்ற திடமான நம்பிக்கையில் இன்போ தமிழ் குழுமம் தமிழ் நெற் ஆசிரியர் பீடத்திடம் உரிமையோடு வேண்டுவது:
தமிழ் ஊடகத்துறை என்றும் ஆக்கபூர்வமானதாக இருக்க வேண்டும் அழிவுபூர்வமானதாக இருக்கக் கூடாது! ஆனால் தமிழ் நெற்…..?
நாடு கடந்த தமிழீழ அரசமைப்பில் அர்ப்பணிப்புடன் செயற்படுபவர்கள் மீது தொடர்ச்சியாக சேறடிக்கும் வேலை ஒன்றையே தனது தொழிலாக அது மேற்கொண்டு விட்டது போல் தெரிகிறது. ஆனால் ஒரு வித்தியாசம் அவர்களை இன்னமும் தமிழினத் துரோகிகள் என அழைக்காத குறை ஒன்றுதான் பாக்கி.
தொடக்கத்தில் அது ஒரு வயதான பாட்டியின் புரிந்து கொள்ள முடியாத தொண தொணப்புப் போன்று வட்டுக் கோட்டைத் தீர்மானங்களின் மீள் வாக்கெடுப்பின் சிறப்புகளை உயர்வாகவும் நாடு கடந்த தமிழீழ அரசின் தேவையைக் குறைவாகவும் மதிப்பிட்டும் இருந்தது.
ஆனால் புலம் பெயர் தமிழரிடையே அதன் பிரச்சாரத்துக்கு உரிய வரவேற்புக் கிடைக்காத காரலத்தால் நாடு கடந்த அரசு ஒரு குறுகிய 45 பாகை அரசியல் என்றும் சர்வதேச முதலாளித்துவங்களின் கைப் பொம்மை எனவும் பரிகசித்தது. இவை எல்லாம் எதிர்பார்த்த பலன்கள் தராத கையறு நிலையில் அது தனது விசமத்தனமான பிரச்சாரத்தை முடிவின்றித் தொடருகிறது. இந்த ஆசிரியர் பீடத்தின் அதிமேதாவிலாச சிந்தனையில் சிக்குண்டிருக்கும் சில அறிவிஜீவிகள் தாமே தமிழினத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் புதிய தலைமை என்ற வறட்டுச் சிந்தனாவாதத்தில் மூழ்கித்தவிக்கின்றனர்.
இந்த மேதாவித்தன முட்டாள்களின் தவறான சிந்தனைப் போக்கை பின்பற்றும் புலிகளின் சில அதிகார பூர்வ ஊடகங்களும் தொடர்ச்சியாக தமிழ் நெற் இணையத்தளத்தின் மதியுரைஞர் என தன்னைத்தானே எண்ணிக்கொள்ளும் மாய மனிதரின் வழிகாட்டலில் தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரனின் இலட்சியத்தை அவரின் உயர்ந்த தியாகத்தை விலைபேசத் தொடங்கியுள்ளனர். இதன் தொடர்ச்சியே சங்கதி உட்பட சில பிழைப்புவாத ஊடங்களில் நாடுகடந்த அரசு சார்ந்தும் அதன் செயற்குழுவின் அறிக்கைகள் செயற்பாடுகள் சார்ந்தும் வெளிவந்த வக்கிரமான அறிக்கைகளும் வசைபாடல்களுமாகும். இதைத்தான் எனது மூதாதையர் சொல்வார்கள் பிள்ளியையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் செயலென்று….
உலகின் புகழ் பெற்ற பிரபலங்களும் கல்விமான்களும் ஆலோசனைக் குழுவில் இணைந்து விபரமாக விளக்கமாக ஆராய்ந்து நாடு கடந்த தமிழீழ அரசை விதந்து உரை செய்தமையானது ஒரு உலக அதிசயத்தையே ஏற்படுத்தி விட்டது. நாடு கடந்த தமிழீழ அரசின் சாத்தியப்பாடும் அதற்கு உலக அளவில் கிடைக்கப் பெற்ற வரவேற்பும் கொழும்பு மற்றும் புது டில்லி அரசுகளை கடுமையாக எதிர்க்க வைத்துள்ளன. இதுவே தமிழ் மக்கள் தமது கரங்களில் எடுத்துக் கொண்டுள்ள புதிய ஆயுதத்தின் வலுவையும் அரசியல் சாத்தியப் பாட்டின் கனதியையும் உறுதிப்படுத்தும் ஆதாரமாக உள்ளது. இலங்கை இந்திய அரசுகள் உடனடியாக ஏதாயினும் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுவிட்டன. அதனால் அவர்களின் பயங்களின் வெளிப்பாடு ஊடகங்களை நிறைக்கத் தொடங்கின. இத்தகைய திடீர் திருப்பங்கள் தமது ஆசைகளுக்கு எதிராக அமைவதை தமிழ் நெற் போன்றவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதே வேளையில் நாடு கடந்த தமிழீழ அரசின் செயற் பாட்டாளர்களுக்கு எதிராக பொது மக்கள் கருத்தைத் திருப்பவும் இவர்களால் முடியவில்லை.
எப்படியிருப்பினும் தமிழ் நெற் ஆசிரிய குழுவின் கல்வித் திறனையும் நிபுணத்துவத்தையும் எவரும் குறைத்து மதிப்பிடக் கூடாது.
எனவே தான் அவர்களின் மனங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவர் உள்ளங்களிலும் மிகப் பெரிதாக உள்ளது. தமிழ் நெற் இந்த உண்மையை உணர்ந்து எமக்கிடையே உள்ள கருத்து வேறு பாடுகளையும் முரண் பாடுகளையும் பரஸ்பரமாக தீர்ப்பது அவசரமும் அவசியமும் என ஏற்று தமிழீழத்தின் நலன் ஒன்றையே கருத்தாகக் கொண்டு முழு ஈடுபாட்டுடன் செயற்பட வேண்டும் என்பதே எமது பெரு விருப்பாக உள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசை தாம் தொடக்க முதலே ஆதரித்ததாகவும் ஆனால் சில காரணங்களால் முடியாது எனவும் தமிழ் நெற் கூறுகிறது. எவருமே புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றுதான்.
அது இப்போது கூறும் காரணம் தேர்தல் முறை சரியில்லை என்பதாகும். ஆனால் என்ன குறை?
ஏன் கண்டிக்கிறது?

குறிப்பான காரணம் என்ன?

அதன் இசைவுக்கு அமைவாக இல்லை என்பதற்காகவா?

அவ்வாறு இல்லை என்றால்…..?
தமிழ் நெற் ஆசிரிய குழு நேரடியாகத் தேர்தலில் பங்கு பற்றி பொது மக்களின் ஆதரவுடன் தான் விரும்பிய படி செய்வதைச் செய்யலாமே?
இலங்கைத் தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த அல்லது அவர்களின் பரம்பரையைக் கொண்டுள்ளதை ஆதாரப் படுத்தும் எவரும் தேர்தலில் பங்கு பெற முடியும். தேர்தல் முறையானது வெளிப்படைத் தன்மையும் ஜனநாயக விழுமியங்களுக்கு முற்றிலும் அமைவாக நடைபெறுகிறது.
சிறீ லங்காவின் ஜனநாயக விழுமியங்களல்ல மாறாக மேற்கத்தைய சட்டப் பதங்களின் முழுமையான அர்த்தம் கொண்ட தேர்தலை நடத்தத் திடசங்கற்பம் கொண்ட தேர்தல் 2010 மே இரண்டாம் திகதி நடைபெறப்போகும் தேர்தலாகும். இதில் எவராவது தடுக்கப் பட்டாலோ அல்லது பாரபட்சத்துக்கு ஆளாக்கப் பட்டாலோ அவர் பகிரங்கமாக குற்ற வாளிகளை உலக சமூகத்தின் முன் நிறுத்தி நியாயம் பெற முடியும்.
எதனைச் செய்யவேண்டுமோ அதனைச் செய்யாது இந்தப் படித்த எழுதும் கூட்டம் வீணான சொற் போரில் ஈடுபட்டு ஏற்கனவே வரலாறு காணாத வகையில் புண்பட்டு நொந்து போயிருக்கும் மக்களை மேலும்; குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது.

தனது வலுவிழந்து காணும் வாதப் போரை நியாயப் படுத்த ஐ.நா. சீனா போன்ற சர்வ தேசசக்திகளைப் பற்றி நிறையக் கூறி வருகிறது. நாடு கடந்த தமிழீழ அரசு முற்றிலும் ஈழத் தமிழரையும் அவர்களின் விடுதலை தொடர்பானதுமான விடையமாகும். நிச்சயமாக எமக்கு மற்றவர்களின் ஆதரவு தேவையானது.
பிச்சை எடுப்பவனுக்கு வேறு தெரிவு கிடையாது.
ஆயினும் நினைவில் இருத்திக் கொள்ளுங்கள்.
இது முற்றிலும் எமது விடையம் அல்லாது வேறு எவருடையதும் அல்ல.
எமக்கு தவறான வழிகாட்டலைச் செய்யவோ நல்லன அல்லாதன செய்யவோ வேறு எவருக்கும் உரிமை கிடையாது.
இது எம்மை எதிர்க்கும் எம்மவருக்கும் வெளியாருக்கும் பொருந்தும் விடையமாகும்.
இந்த நடைமுறையைக் கடைப்பிடிக்கும் எவருக்கும் எம்மோடு சேர்ந்து பங்காற்ற உரிமை இருக்கும்.
எவராலும் விளங்கிக் கொள்ள முடியாத வாதம் ஒன்று முன்வைக்கப் பட்டுள்ளது. அது இப்படியாக உள்ளது.
' ஈழ மக்களுக்கு இரு தெரிவுகள் உள்ளன. ஒன்றில் உலகெங்கிலும் அரசுகளுக்கு எதிராகப் போராடும் ஒடுக்கப் பட்ட மக்களுடன் கரம் கோப்பது, அல்லது ஒன்றோடொன்று மோதிக் கொள்ளும் முதலாளித்துவ குடியேற்ற வாதத்துக்குள் பங்காளி முறையில் தமிழீழத்தின் தேசிய நலன்களை பெறுவது அல்லது இரண்டு முறைகளையும் கடைப்பிடித்து பூகோள இயங்கியலில் இருந்து வழிகாட்டலைப் பெறுவது." பட்டவர்த்தனமான இத்தகைய பார்வையானது கள நிலைகள் பற்றிய மிகவும் இலகு படுத்தப்பட்டதும் அர்த்தமற்றதுமான ஒன்றாகவே இருக்கிறது.
இதுபோன்றே தொடர்பற்ற பல வாதங்கள் மூலம் வாசகரைக் குளப்பத்தில் ஆழ்த்தி முடிவில்லாத மயக்க நிலைக்குக் கொண்டு செல்வதை ஒருவர் அவதானிக்க முடியும். அவர்களின் வாதங்களைப் படிக்கும் எவரும் நாடு கடந்த தமிழீழம் என்பது அவர்களின் கருத்தாக்கத்தில் இருந்து உருவாகவில்லை என்பதால் அது உருவாகாது போவதைக் காண விரும்புகின்றனரோ என்ற முடிவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது உள்ளது. இந்நிலையானது
யூலிஸ் சீசரின் மரணச் சடங்கின்போது முற்ரிக் அந்தனி ஆற்றிய உரையின் புகழ் பெற்ற தொடக்க வரிகளை நினைவு படுத்துகிறது.
அவன் சொன்னான்,
'நான் சீசரை நல்லடக்கம் செய்ய வந்தேனேயன்றிச் சீசரின் புகழ் பாட வரவில்லை" என்று. ஆனால் அவனது பேச்சு நிறைவுற்ற போது அவன் நேர்மாறான பலனையே ஏற்படுத்தினான். ஓன்று பட்டால் அனைவரும் வாழ்வோம் அன்றேல் பிரிந்தால் அனைவரும் மாழ்வோம் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நாம் ஏற்கனவே எமது உறவுகளின் எண்ணற்ற சடலங்களைக் கண்ட பின்னரும் ஒரு இனமாக ஒன்றுபட வேண்டிய அறிவை படிக்க முடியாது தவிக்கிறோம்.
நிச்சயமாக தமிழ் நெற் ஆசிரிய குழுவின் அறிவாற்றல் இந்த பொன் மொழி புகட்டும் பாடத்தைப் புரிந்து கை யோடு கை சேர்த்து ஆக்க பூர்வமாக உழைக்க முன்வர வேண்டும்.
இன்போ தமிழ் குழுமம்






Wednesday, April 14, 2010

ஈழத் தமிழர்கள் மௌனத்தின் மூலம் பலமானதொரு செய்தியை உலகிற்குத் தெரிவித்துள்ளார்கள்!

சொந்த மண்ணிலிருந்து புலம் பெயர்ந்து மேற்குலகில் வாழும் எங்களில் பெரும்பான்மையானவர்கள், இந்த நாட்டு மக்களைப் பார்த்து எங்களது வெளிப்படையான நாகரிகத்தை மாற்றிக்கொள்ள முயல்கிறோமே தவிர, மனதால் மாற்றம் அடைய மறுத்தே வருகின்றோம். எங்கள் கைகளில் முள்ளுக் கரண்டியும் கத்தியும் முளைத்த அளவிற்கு, எங்கள் மனங்களிலும், செயல்களிலும் புதிதாகப் பெரிய மாற்றங்கள் புதிதாக உருவாகிவிடவில்லை. முள்ளிவாய்க்கால் பேரழிவுடன் தமிழீழத்தின் யுத்த களம் பின் நோக்கிச் சென்றது போலவே, எங்கள் இலட்சிய சிந்தனைகளும் குறுகிய அரசியல் பிளவுகளோடு இன்னமும் வேகமாகப் பின் நகர்ந்தே வருகின்றது போலவே தோன்றுகிறது.
தமிழீழத்தின் விடுதலைக்காகவும், தமிழீழ மக்களின் விடிவிற்காகவும் போராட வேண்டிய புலம்பெயர் தமிழர்கள் சிங்கள தேசத்திற்கான தேர்தல் களத்தில் பிளவு பட்டு அணி திரண்டதையும், சிங்கள தேசம் போலவே தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றியைக் கொண்டாடுவதும், தமிழீழத்தின் தேசிய ஆன்மாக்களைக் காயப்படுத்துவதாகவே அமைகின்றது. விடுதலைப் புலிகளின் வேள்வித் தீயில் தம்மையும் அர்ப்பணித்துக்கொண்ட தமிழீழ மக்கள் மௌனமாக அழுவதைக்கூட, தமது அணிக்கான ஆதரவுக் குரலாகக் காட்டும் முயற்சியும் புலம் பெயர் தேசத்தின் கூட்டமைப்பு அணியினரால் மேற்கொள்ளப்படுகின்றது.
விடுதலைப் புலிகளின் கள முனை வீழ்ச்சிக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மேற்கொண்டிருந்த தவறான நகர்வுகளும், புதிய கற்பிதங்களும் புலம்பெயர் தமிழீழப் போர்க் களத்தில் பலமான சலசலப்புகளையும், சந்தேகங்களையும் உருவாக்கியிருந்தது. அதன் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான கருத்துக்களும் ஓங்கி ஒலித்தன. இந்தத் தேர்தலை முன் நிறுத்தி, ஈழத் தமிழர்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் இடையே ஒரு சுவரை எழுப்பும் சதி முயற்சிகளும் கூட மேற்கொள்ளப்பட்டன. நடைபெற்ற தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பாலான ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தாலும் ஈழத் தமிழர்கள் மௌனத்தின் மூலம் பலமானதொரு செய்தியை உலகிற்குத் தெரிவித்துள்ளார்கள். அது, «நாங்கள் சிங்கள தேசத்தின் இனவாத அரசியலுக்குள் எமது நலன்களைத் தேட விரும்பவில்லை» என்பதாகும்.
யாழ். மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 721,359 வாக்காளர்களில் 168,277 பேர் மட்டுமே வாக்களித்துள்ளார்கள். இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வாக்குக்கள் 65,119 மட்டுமே. இது, மொத்த வாக்காளர்களில் 9 வீதமானவர்கள் என்பதும், வன்னி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 266,975 வாக்காளர்களில் 117,185 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வாக்குக்கள் 41,673 மட்டுமே. இது, மொத்த வாக்காளர்களில் 15.6 வீதமானவர்கள் என்பதும், மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 333,664 வாக்காளர்களில் 195,368 பேர் மட்டுமே வாக்களித்துள்ளார்கள். இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வாக்குக்கள் 66,235 மட்டுமே. இது, மொத்த வாக்காளர்களில் 19.85 வீதத்தினர் மட்டுமே. அம்பாறை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 420,835 வாக்காளர்களில் 272,462 பேர் மட்டுமே வாக்களித்துள்ளார்கள். இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வாக்குக்கள் 26,895 மட்டுமே. இது, மொத்த வாக்காளர்களில் 6.39 வீதத்தினர் மட்டுமே.
திருகோணமலை மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் வெளிவராத நிலையில், ஏனைய மாவட்டங்களில் பெரும்பான்மையான, அதாவது 80 வீதத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் சிங்கள நாடாளுமன்றத்திற்கான இந்தத் தேர்தலை நிராகரித்து, மௌனமாகத் தமது தீர்ப்பை வழங்கியுள்ளார்கள். சிங்கள அதிபருக்கான தேர்தலில், மலையகம் உட்பட வட - கிழக்குத் தமிழர்கள் கொடியவன் ராஜபக்ஷவை நிராகரித்ததுடன், பெரும்பான்மையான தமிழர்கள் சரத் பொன்சேகாவுக்கும் வாக்களிக்காமல் அந்தத் தேர்தலைப் புறக்கணித்தனர். அதைப் பெருமையுடன் நினைவு கூர்ந்த புலம் பெயர் தமிழர்களில் சிலர் தற்போது இந்தக் கணக்கைத் தமது வசதிக்காக மாற்றிப் போட்டுப் பார்க்கிறார்கள். ஈழத் தமிழர்கள் சிங்கள நாடாளுமன்றத்தின் ஊடாகத் தீர்வைப் பெற விரும்புகிறார்கள் என அவர்களின் விடுதலை உணர்வுகளைக் கொச்சைப்படுத்த முயல்கின்றனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு நண்பரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, விடுதலைப் புலிகள் யாருக்கு வாக்குப் போடச் சொன்னார்களோ, அவர்களுக்கு நாம் வாக்குகளைப் போட்டோம். விடுதலைப் புலிகள் தேர்தலைப் புறக்கணிக்கச் சொன்னபோது, நாங்கள் முற்றாகத் தேர்தலைப் புறக்கணித்தோம். இந்தத் தடவை அவர்கள் யாருக்கும் வாக்குப் போடும்படி சொல்லவில்லை. அதனால், தேர்தலைப் புறக்கணித்தோம் என்று கூறினார். ஈழத் தமிழர்களின் முடிவு இப்படித்தான் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் சார்பாக, ஓங்கிக் குரல் எழுப்பும் புலம்பெயர் தமிழர்களும் ஈழத் தமிழர்களின் இந்த விடுதலை உணர்வைப் பெருமிதத்தோடு புரிந்து கொள்கிறார்கள்.
ஈழத் தமிழர்களம சார்பாக சிங்கள தேசத்தின் நாடாளுமன்றம் செல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனிமேல் எப்படி நடந்து கொள்ளப் போகின்றது என்பதில்தான் அவர்களது எதிர்காலம் தங்கியிருக்கின்றது. எடுப்பார் கைப்பிள்ளையாக, கிடைத்த அரங்கத்தில் தப்புத் தாளங்கள் போட முயற்சித்தால் காலம் அவர்களுக்கான தண்டனையை வழங்கும்.
தமிழீழம் மலரும் என்ற நம்பிக்கையோடு கல்லறைகளில் கண்ணுறங்கும் மாவீரர்களும், அந்த மண்ணுக்காய் மரணித்த மக்களும் மீண்டும் எழுவார்கள்.





துயரங்களை அழுகைகளை தோல்விகளை வெல்லுவதற்கு மீண்டும் எழுவோம்‐ நிமல்நேசன்‐

இந்த நம்பிக்கையான குறிப்பை எழுதும்படி என்னை தூண்டியவன் சின்னஞ் சிறிய சிறுவன் ஒருவன். யுத்தத்தில் தன் இரண்டு கண்களையும் இழந்த பிறகு இழந்ததைப் பற்றி இனி யோசிப்பதில் என்ன நன்மை என்று கூறியபடி புத்தாடைகளை வாங்கிப் போனான்.
அவன் தன் உலகத்தை ‐ கடந்த வருடம் இந்த நாளை இரத்தமும் சதையுமாக பார்த்திருக்கிறன். இப்பொழுது இந்த உலகம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்க உனக்கு ஆவலாய் இல்லையா என்று கேட்ட பொழுது, அதே மாதிரிதான் இருக்கும். அப்படித்தான் இருக்கிறது என்று அவன் சொல்லுகிறான். எங்களை, எங்கள் மனங்களை புதுப்பிக்க வேண்டும். நம்பிக்கை ஊட்ட வேண்டும். பலப்படுத்த வேண்டும் இவைகளை இந்த நாளில் ஒரு சவாலாக தொடங்குவோம் என்று அவன் நம்பிக்கையுடன் கூறிச் செல்கிறான். சிதைக்கப்பட்ட எங்கள் நிலம் அப்படியே இருக்கிறது. துரத்தப்பட்ட மனிதர்கள் இன்னும் முழுமையாக வீடுகளுக்கு திரும்பவில்லை. மக்களில் ஒரு லட்சம் வரையானவர்கபள் தடுப்பு முகாங்களிலேயே உள்ளார்கள். முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு முகாங்களில் குடும்பங்களை பிரிந்து உறவினர்களைப் பிரிந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர்கள் சிறைச்சாலைகளின்; கம்பிகளுக்கு பின்னால் கிடக்கிறார்கள். உலகில் எந்த இனமும் அனுபவித்துக் கொண்டிருக்காத வலிகளை அலைச்சலை நாம் அனுபவித்திக் கொண்டிருக்கிறோம். 30 வருடமாக யுத்தம் நடந்து முடிந்த பின்னர் இன்னும் எதையும் எட்டாத அல்லது வெற்றி பெறாத நிலையில் தோல்வியைச் சுமந்து இந்த வருடம் வருகின்றது. கடந்த புத்தாண்டை நினைவு கூர்ந்து பார்த்தால் இரத்தமும் சதையும் தோல்வியும் அழுகையும் கண்ணீரும் என்று தமிழினத்தை அதன் ஆன்மாவை வதைத்த நினைவுகள்தான் வந்து கொண்டிருக்கும். ஆனால் அந்த கண்ணீரிலிருந்து தோல்வியிலிருந்து இரத்தத்திலிருந்து சதைகளிலிருந்து மிஞ்சிய சனங்கள் மீண்டுதான் வந்தார்கள். அப்படி வந்தவர்கள் எதையும் கொண்டாட முடியாத சூழல் இருக்கும் பொழுது இந்த வருடம் எங்களை எதிர் கொள்ளுகிறது. இப்படியான புதியவருடங்களின் பிறப்புகளின் போது நாட்டின் தலைவர்கள் அல்லது அரசியல்வாதிகள் வாழ்த்துக்களை வெளியிடுவார்கள். ஆனால் அவை அவர்களிடமிருந்து மக்களுக்கு அனுமதிப்படாத இரக்கப்படாத உரிமைகள் சார்ந்தவையாக இருக்கும்.
எங்களுடைய மகிழ்ச்சியை எங்கிருந்து எப்படி மீட்க வேண்டும்? மகிழ்ச்சிக்குரிய நாளை எப்படி உருவாக்கிக் கொள்ள வேண்டும்? கேள்விகளால் நிறைந்த முற்றுப்பெறாத தவிப்புக்களால் நிறைந்த சூழலில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். புத்தாண்டிற்காக நாங்கள் உடுப்புக்களையும் சமையல் பொருட்களையும் வீட்டு பாவனைப் பொருட்களையும் வாங்கிக் கொண்டிருக்கிறோம். மக்கள் இழந்ததை இப்படித்தான் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் தாயகத்தில் இன்று (13.04.10) நள்ளிரவு 12 மணி வரை ஒரு இரு வெடிகளைத் தவிர பெரியளவில் சத்தங்களைக் கேட்க முடியவில்லை. எதையும் கொண்டாட முடியாத மனநிலையிலிருந்து விரக்த்தியில் இருந்து சோம்பலிருந்து நாங்கள் விடுபட்டு எழுந்து வர வேண்டியிருக்கிறது. துயரங்களை, அழுகைகளை, தோல்விகளை வெல்லுவதற்கு மீண்டு வரவேண்டியிருக்கிறது. புதுவருடம் எப்படி இருக்கும் என்ற எங்கள் குழந்தைகளின் மனங்களை புதுப்பிதற்கு, அவர்களின் கனவுகளை நனவாக்குவதற்கு, வாழ்வை அர்தமுள்ளதாக்குவதற்கு நாங்கள் மீண்டும் நம்பிக்கையுடன் எழுவோம்.




பேரம் பேசும் சக்தியாக "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு" உருவெடுத்துள்ள நிலையில்.....

பிரிந்து நின்ற தமிழ்க்கட்சிகளுக்கு பாடம் கற்பித்துள்ள பொதுத்தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்றாவது பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. கடந்த நாடாளுமன்றத்தில் 22 உறுப்பினர்களைக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தமுறை 14 ஆசனங்களைப் பெறும் நிலையில் இருக்கிறது. கிட்டத்தட்ட எட்டு ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழந்திருப்பது குறிப்பிடத்;தக்கதொரு விடயமே. ஆனால் இந்த இரண்டு தேர்தல்களும் இடம்பெற்ற அரசியல்சூழல், காலம் மற்றும் இடைக்காலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், கூட்டமைப்பைத் தோற்கடிக்க முன்னெப்போதும் இல்லாதளவுக்கு இடம்பெற்ற முயற்சிகள் எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும் போது இதை அவர்களுக்குப் பெரியதொரு தோல்வியாகக் கருதமுடியாது. 2004 பொதுத்தேர்தலில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பின்னால் நின்று அனைத்து தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தனர். அதன் விளைவாக 22 ஆசனங்களோடு அசுர பலம்பெற முடிந்தது. ஆனால் இந்தத் தேர்தலில் கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட பிளவுகளும், வெளியே இருந்து கூட்டமைப்பைத் தோற்கடிக்க மேற்கொண்ட முயற்சிகளும் அதற்குக் கிடைக்க வேண்டிய ஆசனங்களைக் குறைத்து விட்டிருப்பது உண்மை. இந்தக் கட்டத்தில் இனிமேல் கூட்டமைப்பு என்ன செய்யப் போகிறது என்பது மிகவும் முக்கியமான விடயமாக உள்ளது. ஏனென்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இப்போது கிடைத்துள்ள ஆணையைக் கொண்டு இனப்பிரச்சினைத் தீர்வுக்குக் என்ன செய்யப் போகிறது என்பது முதலாவது கேள்வி. இதில் அரசாங்கத்தின் நகர்வுகளும் போக்குகளும் முக்கியமாக இருக்கப் போகிறது. அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எப்படி அணுகப் போகிறது என்பதைப் பொறுத்தே அது தீர்மானிக்கப்படும். ஆனால் அரசாங்கத்தின் அணுகுமுறை திருப்திகரமாக இல்லாது போனால் சர்வதேச ஆதரவைத் திரட்டிக் கொள்வதற்கு கூட்டமைப்பு என்ன செய்யப் போகிறது என்பதும் எதிர்பார்ப்புக்குரிய ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரிக்க எடுத்த முடிவும் சரி,அல்லது பொதுத்தேர்தலில் வேட்பாளர்கள் தெரிவின் போது எடுத்த முடிவுகளும் சரி கூட்டமைபின் வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது உண்மை. யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்திருக்க வேண்டிய ஆறாவது ஆசனத்தைப் பறிகொடுத்ததற்கு தமிழ்க் காங்கிரஸ் பிரிந்து போனதே காரணம். பிரிந்துபோன தமிழ்க் காங்கிரசும் உருப்படவில்லை. பிளவு ஏற்படக் காரணமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இலாபம் கிடைக்கவும் இல்லை. இந்த இலாபத்தை அனுபவித்தது என்னவோ ஈபிடிபி தான். வேட்பாளர் தெரிவில் கூட்டமைப்பு நெகிழவுப் போக்கைக் கடைப்பிடித்திருந்தால் நிச்சயமாக தமிழ்க் காங்கிரஸ் பிரிந்து போவதற்கு நியாயமான காரணம் ஒன்று கிடைத்திருக்காது. சவால்களை இராஜதந்திர ரீதியாக அணுகுகின்ற போக்கில் தம்மை மிதவாதிகள் என்று கூறிக்கொள்ளும் கூட்டமைப்பின் தலைவர்கள் மிதவாதப் போக்கைக் கடைப்பிடிக்கவில்லை. விடயமாக இருக்கப் போகிறது. தமிழரின் உரிமைகள் குறித்து பேரம் பேசும்சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவெடுத்துள்ள நிலையில் அது சரியான வழியில நடக்க வேண்டும் என்பதே தமிழ்மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதற்காகவே குறைந்தளவு மக்களாவது அவர்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள். இது இவர்களுக்கு கொடுக்கப்பட்ட கடைசிச் சந்தர்ப்பம். இதில் தமது அரசியல் சாணக்கியத்தை வெளிப்படுத்தியாக வேண்டும். தவறினால் அதற்கான தண்டனையை தமிழ் மக்கள் கொடுக்கவே முனைவார்கள். அதற்கு வசதியாக அடுத்தடுத்து தேர்தல்கள் வரிசைகட்டி நிற்கின்றன. ஏனைய தமிழ்க் கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிடுவதே உச்ச ஜனநாயகம் என்ற சித்தாந்தங்களைக் கொஞ்சக்காலம் தூக்கியெறிந்து விட்டு தமிழரின் தேசிய பலத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஒன்றுபட முனைய வேண்டும். அதுவே தமிழரின் இருப்புக்குச் சவால் விடும் சக்திகளை சமாளிக்க உதவும்




உலகத்தமிழினம் உங்களின் பின்னால் அணிதிரண்டு நிற்கிறது...

உங்களது பணி வெற்றிபெறும். உலகத் தமிழ் இனம் உங்களோடு நிற்கிறது:
உருத்ரகுமாரனுக்கு தமிழின உணர்வாளர் ராஜநாதன் மனம் திறந்து மடல் ஒன்றை வரைந்துள்ளார்.
உணர்வோடும் இலட்சியப் பற்றோடும் உறுதிகுலையாத உள்ளத்தோடும் கொண்டலட்ட்சியம் குண்றிடாத மாவீரரின் கனவை நனவாக்க உறுதியூண்டு நிற்கும் உங்கள் பணியையும், நாடுகடந்த தமிழீழ அரசுருவாக்கச் செயற்பாடுகளையும் குழப்ப யார் முற்பட்டாலும் அவர்களை மக்கள் தூக்கி எறிவார்கள் என்பதே நாம் கண்ட வரலாறு எனகுறிப்பிடும் ராஜநாதன்
அதிகாரங்களை விடாப்பிடியாக வைத்துக்கொண்டு, மக்களைப் பிழையாக வழிநடத்துபவர்கள், அவர்களே சில தமிழ் ஊடகங்களையும் தம்கையில் வைத்திருக்கின்றனர். எமது மக்கள் முட்டாள்கள் என்ற நினைப்பில் இவர்களின் ஒருவித நடவடிக்கைகள் உங்கள் இலட்சியப் பயணத்தை தடை செய்வதற்காகவே திட்டமிட்டு ஓடிக்கொண்டிருக்கின்றது. ஆனால் தமிழ்த்தேசியம் என்ற குடும்பத்திற்கு வழிகாட்டவந்த ஒரு மூத்த சகோதரன் போல பெரும் பொறுப்பைச் சுமந்திருக்கின்றீர்கள். தமது தேவைக்கு ஏற்ப எங்கும் உடைவுகளை மேற்கொள்வதே இவர்களின் தற்போதைய பணி. தாயகத்தில், தேசியக் கூட்டமைப்பில் பிளவுகளை ஏற்படுத்தியதும் இவர்களின் வேலையே. புலத்திலும் தமிழர்களின் பலத்தைச் சிதறடிப்பது இவர்களின் தற்போதைய பணி. அதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புக்கள் சங்கங்கள் குறித்து மக்கள் மெல்ல மெல்லப் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கின்றனர். தாயகத் தமிழர்கள், இந்த பிரகிருதிகளின் முயற்சிக்கு தகுந்த பாடத்தை வழங்கியுள்ளனர். இவர்களின் கருவிகளாகச் செயற்பட்ட மனிதர்கள்தான் பாவம். ஆனால் அவர்களும் தமது பிழைகளை உணர்ந்து திருந்தவேண்டும் என்பதே எம் போன்றவர்களின் விருப்பம். எந்த நல் முயற்சியும், உடனடியாக வெற்றிபெற்றுவிடாது. அதற்குக் காலம் எடுக்கும். காலம் எடுக்கும் எந்த நற்பணியும், உறுதியும் செழுமையும் அடையும். உங்களது பணி வெற்றிபெறும். உலகத் தமிழ் இனம் உங்களோடு நிற்கிறது. தயக்கம் வேண்டாம். தொடருங்கள் பின்னால் வருவோம். என அவர் அறைகூவல் விடுத்துமுள்ளார் திரு.வி. உருத்ரகுமாரனுக்கு தமிழின உணர்வாளர் ராஜநாதன் மனம் திறந்து எழுதிய மடல் வருமாறு
நாடுகடந்த தமிழீழ அரசு என்ற உங்களின் பணிக்குப் பின்னால், உலகத் தமிழினம் ஒன்றுதிரண்டு நிற்கின்றது என்பதே பேருண்மை. இதனை நன்கு புரிந்த கொள்ளுங்கள். காலம் எடுக்கும் எந்த நற்பணியும், உறுதியும் செழுமையும் அடையும். உங்களது பணி வெற்றிபெறும். உலகத் தமிழ் இனம் உங்களோடு நிற்கிறது. தயக்கம் வேண்டாம். தொடருங்கள் பின்னால் வருவோம்.
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய உருத்திரகுமாரன் அவர்களுக்கு!
தமிழர்களின் வரலாற்றில், முக்கியத்துவம் பெறுகின்ற உங்களின் முயற்சிக்கு, முதலில், வாழ்த்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்ளுகின்றேன். தோல்வி மனப்பான்மை நெஞ்சைத் தாக்க, ஏக்கமும், துயரமும், வேதைனையும் வாட்டிவதைக்க தமிழினம் துடிதுடித்துத் தவித்துப்போயிருந்த காலத்தில், நாடு கடந்த தமிழீழம் என்ற ஒற்றைவரி, தமிழர்களை சற்று நிமிர்த்தி உட்கார வைத்திருக்கின்றது. எதிர்காலம் பற்றிய ஒருவிதமான நம்பிக்கையை விதைத்திருக்கின்றது. மீண்டும், சிரிக்க ஆரம்பித்திருக்கின்றோம். கால்களை மெல்ல நிலத்தில் ஊன்றி நிமிர்வதற்கான ஒரு தென்பு கிடைத்திருக்கின்றது. புலத்தில் தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய ஒரேயொரு நம்பிக்கையைச் சிதைத்து அழிக்கும் நடவடிக்கைகளில், சிலர் ஈடுபட்டிருப்பது மிகுந்த மன வேதனையை அளிக்கின்றது. இது குறித்து நீங்கள், வரைந்த இரண்டு வேண்டுகோள்களையும் ஊடகங்களில் வாசித்தேன். முதல் வெளிவந்த மடலைத் தொடர்ந்து உங்களுக்கு ஒரு மடல் வரைய வேண்டும் என நினைத்தேன் ஆனாலும்.. இன்று நீங்கள் வரைந்திருக்கும் இரண்டாவது மடல் கண்டு இதனை தங்களுக்கு வரைகின்றேன். உங்கள் முயற்சிக்கு ஊறுவிளைவிக்கும் நோக்கிலும், தடை ஏற்படுத்தும் நோக்கிலும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து, நீங்கள் வேதனைப்படுவதும், உங்கள் முயற்சிகளை இடையில் நிறுத்திவிட நீங்கள் முயற்சித்து பின் அதிலிருந்து மீண்டதாகவும் இதுவிடயங்களில் மிக நெருக்கமானவர்களினூடாக அறிந்தேன். வேதனைப்பட்டேன். அதனால், இதனை வரைகின்றேன். அண்ணா! இது வரலாறு. உங்கள் மீது சுமத்தியிருக்கும் பெரும் பணி.

எமது தேசியத் தலைவர், எத்தனை துன்பங்களை, எத்தனை நெருக்கடிகளை, எத்தனை அவமானங்களை, எத்தனை ஆபத்துக்களைச் சுமந்து கல்லில் நார் உரிப்பதுபோல இந்த விடுதலை இயக்கத்தை கட்டிவளர்த்திருப்பார்? எண்ணிப்பாருங்கள். சுயநல சிந்தனையுடைய சமூகத்தில் இருந்து அதி அற்புதமான தியாக மனிதர்களை உருவாக்க அவர் எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பார்?

இன்று, உலகத்தமிழ் சமூகத்தை, நாடு பற்றிய இனம் பற்றிய சிந்தனையுடன் அக்கறையுடன், தமது இனத்துக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற துடிப்புடன், உணர்வுள்ள மக்கள் சமூகமாக மாற்ற வேண்டும் என்ற இலட்சிய வேட்க்கையுடன் அவர் புரிந்த தியாகங்கள் அர்ப்பணிப்புக்கள் நினைத்துப் பார்க்கமுடியாதவை. விரும்பியோ விரும்பாமலோ, குடும்பத்திற்கு வழிகாட்டவந்த ஒரு மூத்த சகோதரன் போல பெரும் பொறுப்பைச் சுமந்திருக்கின்றீர்கள். குழப்பவாதிகள், குதர்க்கம் புரிவோர், தங்கள் அதிகார இருப்பு ஆட்டங்கண்டுவிடும் என்ற பயத்தில் இருப்பவர்கள், தங்கள் பிழைப்பில் மண்வீழ்ந்துவிடும் என அச்சப்படுபவர்கள், தமிழ் மக்கள் தொடர்பான அனைத்து விடயங்களும் தங்களின் அனுமதியுடனேயே நடைபெறவேண்டும் என்று, தலைமைக்குப் புறம்பாக சிந்திக்கத் தலைப்படும் குட்டிக் குட்டி குறுநில மன்னர்கள் இப்படியாக பலர் குறுக்கிடுவார்கள். ஆனால், இவற்றையெல்லாம் கடந்து, பயணப்பட வேண்டியது, தமிழ்மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டவர்களினது தலையாய பணி. நாடுகடந்த தமிழீழ அரசு என்ற உங்களின் பணிக்குப் பின்னால், உலகத் தமிழ் இனம் நிற்கின்றது என்பதே பேருண்மை. இதனை நன்கு புரிந்த கொள்ளுங்கள். அதிகாரங்களை விடாப்பிடியாக வைத்துக்கொண்டு, மக்களைப் பிழையாக வழிநடத்துபவர்கள், அவர்களே சில தமிழ் ஊடகங்களையும் தம்கையில் வைத்திருக்கின்றனர். எமது மக்கள் முட்டாள்கள் என்ற நினைப்பில் இவர்களின் ஒருவித நடவடிக்கைகள் எமது இலட்சியப்பனணத்தை தடை செய்வதற்காகவே திட்டமிட்டு ஓடிக்கொண்டிருக்கின்றது. தமது தேவைக்கு ஏற்ப எங்கும் உடைவுகளை மேற்கொள்வதே இவர்களின் தற்போதைய பணி. தாயகத்தில், தேசியக் கூட்டமைப்பில் பிளவுகளை ஏற்படுத்தியதும் இவர்களின் வேலையே. புலத்திலும் தமிழர்களின் பலத்தைச் சிதறடிப்பது இவர்களின் தற்போதைய பணி. அதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புக்கள் சங்கங்கள் குறித்து மக்கள் மெல்ல மெல்லப் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கின்றனர். தாயகத் தமிழர்கள், இந்த பிரகிருதிகளின் முயற்சிக்கு தகுந்த பாடத்தை வழங்கியுள்ளனர். இவர்களின் கருவிகளாகச் செயற்பட்ட மனிதர்கள்தான் பாவம். ஆனால் அவர்களும் தமது பிழைகளை உணர்ந்து திருந்தவேண்டும் என்பதே எம் போன்றவர்களின் விருப்பம். எந்த நல் முயற்சியும், உடனடியாக வெற்றிபெற்றுவிடாது. அதற்குக் காலம் எடுக்கும். காலம் எடுக்கும் எந்த நற்பணியும், உறுதியும் செழுமையும் அடையும். உங்களது பணி வெற்றிபெறும். உலகத் தமிழ் இனம் உங்களோடு நிற்கிறது. தயக்கம் வேண்டாம். தொடருங்கள் பின்னால் வருவோம். என அவர் தனது மடலில் குறிப்பிட்டுள்ளார்