வரலாற்றில் எங்கேயும் இல்லாத எழுச்சி, தமிழீழத்தில் பதிவு செய்யப்பட்டது. வீழ்கிறோமா, எழுகிறோமா என்பதல்ல. இதில் ஏதாவது ஒன்றுதான் நடைமுறையாகும். ஒவ்வொரு நிலையிலும் ஏதோ இரண்டு இருக்கும். அதில் ஒன்றையே வென்றெடுக்கமுடியும்.
வெல்வதற்கான அகப்புற சூழல்கள் அதில் புதைந்துள்ள உண்மை நிலைகளை உள்ளத்திலும் உணர்விலும் கலந்திருக்கும் தீர்மானகரமான லட்சிய விளைவுகள் இவைகளே ஒரு போராட்டத்தை நடத்துவதற்கு மட்டுமல்ல, அந்த போராட்டத்தை வெற்றி காண்பதற்குமான நிலையை உருவாக்குகிறது. தமிழீழ விடுதலையின் போராட்டமும்கூட வெற்றியைத்தவிர வேறொன்றையும் அடையாத நிலையே தொடர்கிறது. மேலோட்டமாக தமிழீழ தேசிய ராணுவம் அழிக்கப்பட்டதாகவும், அது துடைத்தெறியப்பட்டதாகவும் ஏராளமான பரப்புரைகள் செய்யப்பட்டாலும் நமக்கு காலம் சொல்லித்தரும் செய்தி, கொடுங்கோலர்களின் வெற்றி நீடிப்பதில்லை என்பதுதான். ஆகவே, ஒரு தேசிய இனத்தின் அழித்தொழிப்பு, நிலங்களை அபகரிப்பதில் மட்டுமே கண்ட வெற்றி, தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடையாளங்களை அழிப்பதின் மூலமே கண்ட வெற்றி, ரத்தமும் சதையும் தெறிக்க அசூரத்தனமான தாக்குதலால் கிடைத்த வெற்றி, தொடர்ந்து நிர்வாகிக்க முடியாத தன்மையைத்தான் உள்ளடக்கி இருக்குமே தவிர, இவை தொடர்ந்து நடைமுறையில் இருப்பதற்கு ஒரு துளிக்கூட வாய்ப்பு கிடையாது. தாம் வீழ்ந்து விட்டதற்காக எப்போதுமே தமிழ் தேசிய ராணுவம் துயரடைந்தது கிடையாது. காரணம் வீழ்ந்ததால் மட்டுமே தோல்வி நிர்ணயிக்கப்படுவதில்லை. எழாமல் இருப்பதிலேதான் தோல்வி தீர்மானிக்கப்படுகிறது. ஆகவே, யாம் வீழ்ந்தோம் என்பதை கண்ட நம்முடைய பகைவர்கள், நாம் எழுந்ததை காணாமல் போனது அவர்களின் பேதமையை வெளிக்காட்டுகிறது. நாம் வீழ்ந்தே கிடப்பதற்கு கோழைகள் அல்ல. நமக்குள்ளான ஒற்றுமை சீர்குலைவே உண்மையான இனம் வீழ்வதற்கு காரணமாகியது. ஆனாலும் துரோகிகள் அடையாளப்படுத்தப்படும்போது, காற்றில் அடித்துச் செல்லப்படும் சருகுகளைப்போல் அவர்களின் வரலாறும் வீழ்த்தப்படும். ஆனால் மண்ணின் மானத்திற்காக நின்ற மாவீரர்களின் அணிவகுப்பு, மண்ணைப் போன்று அங்கேயே நிலைநிறுத்தப்படும். யாராலும் இவர்களை, இவர்களின் வாழ்வை அழித்தொழிக்க முடியாது. ஆற்றல் கொண்ட எத்தனையோ பேய் அரசுகள் போராளிகளை வீழ்த்த பலமுறை முயற்சித்து, தோல்வியே கண்டிருக்கிறது. தாம் ஒவ்வொரு முறை வீழ்த்தப்படும்போதும் அவர்கள் புதிய புரிதலோடு, புதிய வாழ்வை கற்றுக் கொண்டு எழுச்சியோடு எழுந்து மீண்டும் போருக்கு செல்கிறார்கள். தமது லட்சியம் அடையும்வரை, தேவைகள் நிறைவாக்கப்படும்வரை, அவர்களின் பயணம் தொய்வடையப்போவது கிடையாது. அவர்கள் தொய்வடைவதற்கு தமது சொந்த நலனுக்கான போராளிகள் அல்ல. கூலிக்காக தன் மனைவி மக்களின் வாழ்விற்காக அவர்கள் களத்தில் இல்லை. தம் வருங்கால சந்தத்திக்காக, தமது இனமான அடையாளத்திற்காக, தமது மொழி, பண்பாடுகளுக்காக களத்திலே விலைமதிப்பற்ற தமது இன்னுயிரை கொடையாகத்தர மகிழ்வாக சிரித்த முகத்தோடு களத்திற்கு வந்திருக்கிறார்கள். வெறும் சித்ரவதைகள், அடக்குமுறைகள், அவமானங்கள், அட்டூழியங்கள் இவைகளால் அவர்களின் மனங்களிலுள்ள எழுச்சியை முடக்கிப்போட முடியாது. அவர்கள் தமக்காக வாழ்பவர்கள் அல்ல. தம் மக்களுக்காக வாழ்பவர்கள். தமது எதிர்கால நலனுக்காக அவர்கள் களத்திலே இல்லை. எதிர்காலத்தில் தமது இனம் மகிழ்வோடு இருப்பதற்காக களத்திலே இருக்கிறார்கள். அவர்களின் போராட்டத்தை எந்த அடக்குமுறையாலும் ஒடுக்கமுடியாது. எந்த கொடுமையாலும் குறைத்துவிட முடியாது. உடலில் ஏற்படுத்தப்படும் காயங்களால் அவர்களின் மனங்கள் மேலும் மேலும் எழுச்சியூட்டப்படுகிறது. அங்கங்களை இழந்து அவர்கள் அமைதி காப்பதில்லை. உடல் உறுப்புகள் அவர்களின் உத்வேகத்தை குறைக்கப் போவதில்லை. காரணம், அவர்கள் உடலால் மட்டுமே இந்த உலகத்தில்வாழ விரும்பாதவர்கள். உள்ளத்தால் இந்த மண்ணிலே ஒன்றி கிடப்பவர்கள். உடலில் ஒரு உறுப்பு சிதைக்கப்படுவதால் அவர்களின் உள்ளத்தில் இருக்கும் முழு லட்சியம் மேலும் மெருகூட்டப்படும். அவர்களின் உயிர் பிரியும்போது, அவர்களின் உள்ளம் இந்த உலகை அவர்களின் லட்சியத்தை, அவர்களின் போராட்ட கருவை வேறொரு உடலோடு ஒன்றச்செய்யும். தொடர்ந்து தமது இழப்பு ஒரு புதிய படைப்பாக உருமாறி இருப்பதைத்தான் இதுவரை போராளிகளின் வாழ்வு அவர்களின் நிகழ்வு நமக்கு கற்றுத் தந்திருக்கிறது. போராளிகள் அச்சமற்றவர்கள். காரணம், அவர்களின் சொந்த நலன் இங்கே கிடையாது. அச்சம் என்பது லட்சியத்தின் விரோதி. அச்சம் ஒரு மனிதனை சிதைக்கும். அவன் மனதை கிழித்தெறியும். அவன் ஆற்றலை துடைத்தழிக்கும். அதுவும் உயிரச்சம் மாந்த குலத்தின் மாபெரும் எதிரி. இன்று பல ஆற்றல் வாய்ந்த போராட்டங்கள் ஒழிந்து போனதென்றால், அதற்கு உயிரச்சம் பெரும் காரணம். இன்று உலகெங்கும் அடக்குமுறையாளர்கள் உயர்ந்தெழுந்து ரத்தவாடை வீசும் தமது கோரை பற்கள் தெறிய சிரிக்கிறார்கள் என்றால், உயிரச்சம் கொண்ட மக்கள் தம்மை எதிர்க்க மாட்டார்கள் என்கின்ற தைரியம். ஆனால் இதை உடைத்து, உலகிற்கே ஒரு பெரும் அடையாளமாய் எமது தேசிய ராணுவம் கட்டி அமைக்கப்பட்டது. எமது தேசிய தலைவரின் வாழ்வு அதற்காகவே அர்ப்பணிக்கப்பட்டது. உயிரிழப்பதற்கு அவர் வாயிலிருந்து வரும் சொல்லே அவர்களின் கட்டளையாக இருந்தது. உயிர் வாழ்வதற்காகத்தான் யாசித்துக் கொண்டிருப்போர் இடையே, நான் உயிரிழக்கத்தயார். எம்மை களத்திற்கு அனுப்புங்கள் என்று யாசிக்கும் பெரும் படையை எமது தேசிய தலைவர் கட்டி அமைத்திருந்தார். உயிர் குறித்த ஆசை எமது தேசிய ராணுவத்திடம் துளிக்கூட இல்லை. அவர்கள் உயிர் வாழ்தலை ஒரு தவமாக கருதவில்லை. உயிரிழப்பைத்தான் அவர்கள் தவமாய் பெற்றார்கள். இந்த தவம், விடுதலை என்கின்ற வரத்திற்கான தவமாய் இருந்தது. அவர்களின் உயிர், தவம் என்றால், அவர்களின் வரம் விடுதலையாக காட்சி தந்தது. விடுதலை என்கின்ற அந்த வரத்தைப் பெற, ஆயிரக்கணக்கான தமிழ்தேசிய ராணுவத்தினர் உயிரிழப்பு என்கின்ற தவத்தை விரும்பி ஏற்றார்கள். உலகிலேயே உயிரிழக்க விரும்பிய பெரும் படை எமது தேசிய ராணுவத்தின் வீரத்தை, அவர்களின் மண்ணின்மீது கொண்ட நேசத்தை, வருங்காலத்தின் மீது கொண்ட அக்கறையை, உலகத்தமிழர்கள் மீது அவர்கள் கொண்டிருந்த அன்பை அடையாளப்படுத்தியது. அவர்கள் ஒருபோதும் தமக்காக வாழாது, முனிவர்களாக இருந்தார்கள். ஒவ்வொருநாளும் அவர்களின் சிந்தனை, விடுதலையைக் குறித்தே சிந்தித்தது. அவர்களின் பாதம் விடுதலையின் பாதையையே தேர்வு செய்தது. அவர்களின் பயணம் விடுதலையின் லட்சியத்திலேயே நடைபோட்டது. எப்படிப் பார்த்தாலும் தமக்கான விடுதலை ஒன்றே. தமது வாழ்வு என்கின்ற கோட்பாட்டளவு சிந்தனையாளர்களாக அவர்கள் திகழவில்லை. மாறாக செயல்வீரர்களாக மாறி நின்றார்கள். அந்த செயலிலே ஒரு தெளிவு இருந்தது. அந்த செயலிலே ஒரு நியாயம் இருந்தது. அந்த செயலிலே தர்மம் இருந்தது. அந்த செயல் எமது மக்களின் எதிர்கால வாழ்வின் உத்திரவாதம். அந்த செயல் எமது மக்களின் மகிழ்ச்சிக்கான களம். அந்த செயல் எமது எதிர்கால தலைமுறையின் எழுச்சி. எதிர்கால தலைமுறையின் வாழ்க்கை. எதிர்கால தலைமுறையின் நம்பிக்கை. இதுதான் அவர்களின் வாழ்வை தீர்மானித்தது. வெறும் ஐந்து பேருடன் களம் அமைத்த எமது தேசிய தலைவர், ஆயிரக்கணக்கான தமிழ் புலிகளை சாவை ஏற்கும் அளவிற்கு துணிவு கொண்ட படையாக கட்டி அமைத்தார் என்றால், அடிப்படையில் எமது தேசிய தலைவர் அந்த மக்களை நேசித்ததுதான் பெரும் காரணம் என்பதை எதிரிக்கூட மறுக்காமல் ஏற்றுக் கொள்வார். உலகில் நடைபெற்று முடிந்த பல்வேறு போராட்ட தோல்விகள், பல தருணங்களில் மரண பயத்தாலேயே நிகழ்ந்திருக்கின்றது. சாவுக்குமுன் வீசுகின்ற கடும் புயலால் அவர்களின் வாழ்வு அழித்தொழிக்கப்படுகிறது. தூக்கு மேடைக் குறிப்புகள் நூலில் ஜூலிஸ் பூசிக் கீழ்க்கண்டவாறு கூறுகிறார், "இங்கே வருவதற்குள் உன்னிடம் மிஞ்சி இருப்பது, வாழ்க்கையிலேயே மிக மிக முக்கியமான ஒன்றேயாகும். இங்கே வருவதற்குள் உன்னுடைய நிஜ உருவத்தை அலங்கரித்த அல்லது பலஹீனப்படுத்திய அல்லது பக்குவப்படுத்திய எல்லாப் புறத்தோற்றங்களும், சாவுக்கு முன் வீசுகிற கடும் புயலால் வழித்து எறியப்பட்டுவிட்டன. எழுவாயும் பயனிலையும் மட்டுமே மிஞ்சி இருக்கின்றன. விசுவாசமானவன் எதிர்க்கிறான், துரோகி காட்டிக் கொடுக்கிறான், வீரன் போராடுகிறான், கோழை சரணடைகிறான். நம் ஒவ்வொருவரிடமும் பலமும் பலஹீனமும் இருக்கின்றன. துணிச்சலும் பீதியும் இருக்கின்றன. உறுதியும் ஊசலாட்டமும் இருக்கின்றன. சுத்தமும் அசுத்தமும் இருக்கின்றன. இங்கு இவ்விரண்டில் ஒன்றுதான் மிஞ்சுகிறது. உண்டு அல்லது இல்லை. இவ்விரண்டு எதிர்முனைகளுக்கு இடையே, எவனாவது சாதுர்யமாக நடிக்க முயற்சித்தால், அந்த நடிப்பு சட்டென்று எல்லோர்க்கும் விளங்கிவிடும்." ஜூலிஸ் பூசிக், இட்லரின் சர்வாதிகார அடக்குமுறைக்கு பலியான போராளி. 1945 ஏப்ரலில் இட்லரின் நாஜுக் படை தோற்கடிக்கப்பட்டப்பின், இட்லர் மறைந்துபோனான். ஆனால் இன்று வரை ஜூலிஸ் பூசிக் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஜூலிஸ் பூசிக் பட்ட சித்ரவதைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. ஆனாலும் கொண்ட லட்சியத்தில் ஒரு துளிக்கூட பின்வாங்காமல் இறுதிவரை அடக்குமுறையாளனை எதிர்ப்பதில் தெளிவான திசையை கண்டறிந்து, அதைப் பின்பற்றினார். அதே பயணம்தான் தமிழீழத்திலும் தொடர்கிறது. எமது தேசிய தலைவரின் தலைமை அதை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறது. எத்தனைப்பேர் என்ன பேசினாலும், அதை புறக்கணித்துவிட்டு, நமது லட்சிய தேவையை, நமது எதிர்கால மகிழ்ச்சியை, நமது நிரந்தர வாழ்வை உறுதிப்படுத்த நாம் புலிகளின் திசையில் புறப்படுவோம். அதுதான் நமது எதிர்காலத்தின் மையப்புள்ளி. நமது நிகழ்காலத்தின் நடைமுறை. நமது சந்ததிக்கான நிம்மதி. இதைத் தவிர்த்து, வேறெந்த சிந்தனையும் நமக்குள் எழ வேண்டாம்.
Thursday, April 8, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment